பக்கம் : 828 | | பேசுபவர் ஆகார், என்றனன் - என்று சுவலனரதன் உரைத்தான், எனலும் - உரைத்தவுடன், எதிர்தெழித்து - இவ்வுரைக்கு எதிராக உரப்பி, அவனும் எழுந்தனன் - தூமகேதனனும் போர்க்கு எழுந்தான், இவனும் எழுந்தனன் - சுவலனரதனும் போர்க்கு எழுந்தான், அன்று போர் மலைந்தார் - அற்றை நாள் இருபெருமறவரும் போர் ஆற்றினர், இவ்வுலகம் அதிர்ந்தது - இம்மண்ணுலகம் நடுங்கிற்று, அரசரும் அமர் ஒழிந்து நின்றார் - அப்போர்க்களத்தே இடந்தொறும் போராற்றி நின்ற இரு திறத்து வேந்தரும் தத்தம் போர்த்தொழிலை நிறுத்தி இவர் போரைப் பார்த்துக்கொண்டு நிற்பாராயினர், (எ - று.) மீண்டும் சுவலனரதன், அடே தூமகேதனா! வீரரானவர் இவ்வாறு வாயைப் பிளந்துகொண்டு தற்புகழ் பேசுவரோ என்று இகழ்ந்தானாக, தூமகேதனன், அவனை உரப்பியவனாய்ப் போர் தொடங்க இவனும் தொடங்கினான்; அப்போது பூமி நடுங்கிற்று; போர்செய்த மற்றைய அரசர் தம் போரை நிறுத்தி இவர்கள் போரைக் கண்டு வியந்து நிற்பாராயினர், என்க. | ( 192 ) | இதுவுமது | 1323. | ஆர்த்தன திசைக ளதிர்ந்ததிவ் வுலக மலைகடல் கலங்கின விருளாற் போர்த்தது விசும்பு புலம்பின விலங்கல் புரண்டன பொருவரைத் துறுகற் 1சார்த்தினர் புடைக்குந் தண்டின ரெதிரத் தாங்கியும் வாங்கியுந் தடுத்தும் வேர்த்தனர் மெய்யால் வெதும்பினர் மனத்தால் விசும்பினை மயங்கவே திரிந்தார். | (இ - ள்.) திசைகள் ஆர்த்தன - அப்பொழுது திக்குகள் எதிரொலி செய்தன, இவ்வுலகம் அதிர்ந்தது - இப்பூமி நடுங்கிற்று, அலைகடல் கலங்கின - அலையையுடைய கடல்கள் கலங்கின, இருளால் விசும்பு போர்த்தது - இருளினாலே விண் மறைபட்டது, விலங்கல் புலம்பின - மலைகள் எதிர்ஒலி செய்தன, பொருவரைத் துறுகல் - பொருந்திய மலைகளினிடத்தே உள்ள குறுங்கற்கள், புரண்டன - உருண்டு வீழ்ந்தன, சார்த்தினர் புடைக்கும் தண்டினர் - ஒன்றோடு ஒன்று பொருத்திப் பின்னர்த் தாக்கும் தண்டையுடையராய், எதிரத்தாங்கியும் - நேர்நின்று ஏந்தியும், வாங்கியும் - மீளப் பின்புறமாக இழுத்தும், தடுத்தும் - ஒருவர் தாக்குங்கால் ஒருவர் தடுத்தும், மெய்யால் வேர்த்தனர் - உடல் வெயர்த்தார், மனத்தால் வெதும்பினர் - மனம் புழுங்கினர், விசும்பினை மயங்கவே திரிந்தார் - விசும்பெங்கும் பொருந்தச் சுற்றினர், (எ - று.) | |
| (பாடம்) 1 சார்த்திரள். | | |
|
|