பக்கம் : 851
 

     சுவணகேதுவின் வாளும் கேடகமும் கவசமும் மார்பும் ஊடுருவிக் சடிமன்னன்
அம்புகள் கழிந்தனவாகச் சுவணகேது மாண்டான், என்க.
 

( 220 )

விஞ்சையர் படை புறமிடல்

1351. தூவி யார்சுவ ணக்கொடி
மேவி னான்பட வேமிகை
1மாவி னார்படை வாரிபோர்
ஓவி யாங்குடை வுற்றதே.
 
     (இ - ள்.) தூவி ஆர் சுவணக் கொடி - சிறகுகளையுடைய கருடப் பறவையை
எழுதிய கொடியை, மேவினான் - மேற்கொண்டவனாகிய சுவணகேது, படவே -
போரின்கண்ணே மாண்டு வீழ்தலுமே, மிகை மாவினார் படைவாரி - மிகுதியாய யானை
குதிரைகளையுடைய விஞ்சையர் படையாகிய கடல், போர்ஓவி - போர் செய்தலை ஒழித்து,
ஆங்கு - அப்பொழுது, உடைவுற்றது - புறங்கொடுத் தோடிற்று, (எ - று.)
சுவணகேது மாண்டவுடன் அச்சுவகண்டன் படைகள் புறங்கொடுத்து ஓடலாயின, என்க.
 

( 221 )

சிறீசேனன் போர்க் கெழுதல்

1352. வென்று வேற்றவர் நின்றனர்
என்ற மாற்ற மிசைத்தலும்
நன்று நன்றென நக்குமேல்
சென்ற னன்சிறீ சேனனே.
 
     (இ - ள்.) வென்று வேற்றவர் நின்றனர் - நம்படையை வென்று நம் பகைவர்
செருக்குற்று நின்றனர், என்ற மாற்றம் - என்ற மொழிகளை, இசைத்தலும் - தூதர்கள்
தன்பாற் கூறியவுடனே, சிறீ சேனன் - சிறீசேனன் என்னும் வீரன், நன்று நன்று என நக்கு
- நன்று நன்று அவ்வாறாயிற்றோ என்று சினந்து சிரித்து, மேல் சென்றனன் - பகைவர்
மேல் போரிட விரைந்து போயினான், (எ - று.)
 

     (பாடம்) 1 மாவி னாற்கடற் றானைபோர்.