பக்கம் : 865
 
     வியப்புடைத்து, என - என்று கூறி, அலர நக்கனன் - பெருகச் சிரித்தான், கதிர்
விடுவளை யெயிறு உடைய காளையே - சுடருகின்ற கோரப் பற்களையுடைய கனகசித்திரன்,
(எ - று.)

     விதிபடு மனிசர் - விச்சாதரருக்குத் திறைகொடுத்து அவருடைய ஆணையிலே
அடங்கி வாழும் மனிதர் என்க.

     நக்கனன் என்றதற்கேற்பக் கதிர்விடு வளை யெயிறுடைய காளை என்றார். நமது
ஆணைக்கடங்கி அஞ்சிவாழும் மனிசரை யாம் அஞ்சுதல் புலி புல்வாய்க்
கஞ்சினாற்போன்றதொரு வியப்புடைத்தென்பான். அதிசயம் இது என்றான் என்க.

(251)

 

இதுவுமது

1382. உடைந்தவர் மனங்களை யுருவ வீழ்த்திடு
மடந்தையர் வடிக்கணம் பல்ல வாய்விடின்
மிடைந்தவர் தொடங்கிய வீரக் 1கோட்டியுள்
அடைந்தவ ரடுபடைக் கஞ்சல் வேண்டுமோ.
 
     (இ - ள்.) உடைந்தவர் மனங்களை - போரிற் புறமிட்டு ஓடிய
ஆண்மையில்லாதோரின் நெஞ்சுகளை, உருவ - ஊடுருவிப் போம்படி, வீழ்த்திடும் -
தைத்து வீழ்த்துவனவாகிய, மடந்தையர் - பெண்டிர்களின், வடிக்கண் அம்பு அல்ல
ஆய்விடின் - இகழ்ந்து நோக்கும் வடிக்கப்பட்ட அக்கண்ணம்பு கட்கன்றி, மிடைந்தவர்
தொடங்கிய வீரக்கோட்டியுள் - செறிந்தவராய்ப் போர் தொடங்கிய மறவர் கூட்டத்தே,
அடைந்தவர் - போர் செய்யச் சென்ற மறவர்கள், அடுபடைக்கு - கொல் கருவிகட்கு,
அஞ்சல் வேண்டுமோ - அஞ்சுவதும் தகுமோ, (எ - று.)

     வீரர்கள், புறமிட்டோடிய தம்மைத் தம் பெண்டிர் இகழ்ந்து நோக்கும்
கண்ணம்புகட்கே அஞ்சவேண்டுமன்றிப் பகைவர் விடும் அம்புக்கு அஞ்சுதல் நாணுடைத்
தென்றான், என்க.

(252)

 

இதுவுமது

1383. தானுடம் 2பிறந்ததற் பின்னுந் தன்றிறல்
வானுடன் புகழ்தர நிற்கு மண்மிசை
மானுட ருயிர்கொள மான மில்லிர்காள்
ஊனுடம் பிதன்பொருட் டுடையல் வேண்டுமோ.
 

     (பாடம்) 1 கோடியுள். 2 பிழந்ததற்.