பக்கம் : 866
 

     (இ - ள்.) தான் உடம்பு இறந்ததன் பின்னும் - ஒருவன் தன்னுடல் நீத்திறந்த
பின்னரும், தன்திறல் - தனது ஆண்மை, வானுடன் புகழ்தர - தேவர் உலகத்தோடே
புகழையும் ஒருங்கே தந்து, நிற்கும் - என்றும் நிலைத்து நிற்பதாம், மண்மிசை மானுடர்
உயிர்கொள - நிலத்தில் வாழும் எளிய மனிதர்கள் உங்கள் உயிர்களைக் கொள்ளாநிற்ப;
மானமில்லிர்காள் - மானங்கெட்டவர்களே, ஊனுடம்பு இதன் பொருட்டு - அழிதன்
மாலைத்தாகிய ஊனாலாய இவ்வெளிய உடலை ஓம்பும்பொருட்டு, உடையல் வேண்டுமோ -
புறங்கொடுத்து ஓடவும் வேண்டுமோ, (எ - று.)

     அழிதன் மாலைத்தாகிய ஊனுடலைவிட்டும் நிலைத்து நிற்கும் புகழை ஓம்புதலே
மறவர்க்கு மாண்பாம். மானங்கெட்டவர்களே! கணப்போதிற்றானே மாய்ந்தழியும்
இவ்வூனுடம்பை ஓம்பவோ இங்ஙனம் உடைந்தோடுகின்றீர் என்றான் என்க.

(253)
 

இதுவுமது

1384. நெய்யினா னிழன்றுநீர் நின்ற நீளொளி
வெய்யவா ளமரிடை வெருவி யிட்டதங்
கையினாற் கருனையின் கவளங் கொள்ளிய
ஐயன்மார் போந்ததென் றசதி 1யாடினான்.
 
     (இ - ள்.) நெய்யினால் நிழன்று நீர் நின்ற நீள்ஒளி வெய்ய வாள் அமரிடை -
நெய்பூசுதலாலே விளங்கி மறத்தன்மை நிற்றற்குக் காரணமான தன்மையுடைய நீண்ட
ஒளிக்கதிர்காலும் வெவ்விய வாளால் ஆற்றப்படும் போர்த்தொழிலில், வெருவியிட்ட தம்
கையினால் - அஞ்சித் தம் படைக்கலன்களை எறிந்துவிட்ட தம்முடைய திருக்கைகளாலே,
கருனையின் கவளம் கொள்ளிய - மனைவியர் உவந்தூட்டும் பொரிக்கறியோடு கூடிய
உண்டியை ஏந்தி உண்ணவோ, ஐயன்மார் போந்தது - சிறந்த தலைவர்கள் இங்கு வந்தது,
என்று அசதியாடினான் - என்றுகூறி இகழ்ந்தான், (எ - று.)

     அசதியாடல் - பரிகசித்தல்.

     படைத்தலைமை சான்ற பெரியீர்! பகையஞ்சி வாள் முதலியவற்றை விட்டெறிந்த
இத்திருக் கைகளால், பொரிக்கறிக்கவளம் நுங்காதலிமார் தர அவற்றை ஏந்தி உண்ணவோ
இவ்வாறு நீயிர் ஓடிவருகின்றீர் என்றான் என்க.
ஐயன்மார் என்றது இகழ்ச்சி.

(254)


     (பாடம்) 1 சொல்லினான்.