பக்கம் : 867
 

கனக சித்திரனின் போர்த்திறம்

1385. இன்னண மொழிந்தெதிர் தெழித்து மாற்றலர்
மன்னிய கடற்படை மண்டி வாளினால்
கன்னவி றோளினான் கண்டங் கண்டமாத்
துன்னிய துணிபல தொடரத் தோன்றினான்.
 
     இ - ள்.) இன்னண மொழிந்து - இன்னோரன்ன மொழிகள் பல பேசி, எதிர்தெழித்து
- அவர்களை எதிர்நின்று அதட்டி, மாற்றலர் மன்னிய கடற்படை மண்டி - பகைவர்கள்
நிலைபெற்ற கடல்போன்ற பெரிய படையிடத்தே புகுந்து, வாளினால் - தனது
வாட்படையாலே, கன்னவில் தோளினாள் - மலையை ஒத்த தோளையுடைய கனகசித்திரன்,
கண்டங் கண்டமாய் - துண்டு துண்டுகளாய், துன்னிய துணிபல தொடர - நெருங்கிய
உடற்றுணிகள் பற்பல தான் செல்லும் வழியிலே தொடர்ந்து தோன்றுமாறு, தோன்றினான் -
விளங்குவானாயினன், (எ - று.)

     இவ்வாறு இகழ்ந்த கனகசித்திரன் போர்க்களத்தே புக்குப் பகைவர்கள் உடல்
துண்டதுண்டமாய்ப் புரள வெட்டி வீழ்த்தி நூழிலாட்டினான் என்க.

(255)

 

இதுவுமது

1386. விலங்குவேல் 1கொண்டையை யுந்தி வேற்றவர்
2மலங்கமேற் செல்வது மான மாமெனப்
பொலங்கலங் கழலொடு புலம்பப் பூமிமேல்
3அலங்கலா னடந்தம ரழுவந் தாங்கினான்.
 
     (இ - ள்.) விலங்குவேல் கொண்டு ஐயை உந்தி - திகழ்கின்ற வேற்படைகொண்டு
படைத்தலைவனைக் குத்திவீழ்த்தி, வேற்றவர் - எஞ்சிய படைஞர், மலங்க - கலங்கும்படி,
மேற்செல்வது - போர்மேற் செல்லுதல், மானம் ஆம் என - பெருமை ஆகும் என்று கருதி,
பொலங்கலங் கழலொடு புலம்ப - பொன் அணிகலன்கள் வீரக்கழலுடனே ஒலிக்குமாறு,

பூமிமேல் - நிலத்தின் மேலே, அலங்கலான் - மாலையணிந்த கனகசித்திரன், நடந்து - தன்
கால்களாலே நடந்து, அமர் அழுவந் தாங்கினான் - அமர்க்களத்தே பகைவர்களை
எதிர்த்துத் தடுத்தான், (எ - று.)

     இப் படைக்குத் தலைவனை முன்னர்க் கொன்று பின்னர்ப் படைகளை அழிப்பதே
மாண்பெனக் கருதிப் போர்க்களத்தே காலால் நடந்தே சென்றான் என்க.

(256)


(பாடம்)1 கொண்டவை. 2 மலங்குமேற். 3 அலங்கலர் நடந்த