பக்கம் : 871
 

    அச்சுவகண்டனுடைய தம்பிமார்களும் பகைவர் அஞ்சும்படி கனன்று போர்க்களம்
புகுந்து போராற்றினர் என்க.

(262)

1393. கண்ணிடை சிவந்துகை சுட்டிக் காய்ந்துதம்
பண்ணுடை மழகளி றுந்தி னார்படை
எண்ணிடை யிடுமிட மின்றி யெங்கணும்
மண்ணிடை யவரொடு 1மயங்கி நின்றதே.
 
     (இ - ள்.) கண் இடை சிவந்து - கண்கள் சிவந்து, காய்ந்து - சினந்து, தம்
பண்ணுடை மழகளிறு - தாம் ஏறிய ஒப்பனை செய்யப்பட்ட இளங்களிறுகளை, கை சுட்டி -
கையாலே குறித்து, உந்தினார் - செலுத்தினார், எண் இடை இடும் இடம் இன்றி -
எள்ளைத்தானும் இடையே இடுதற்குரிய சிறிய இடந்தானும் இல்லாதபடி, படை -
விஞ்சையர் படை, எங்கணும் - எவ்விடத்தும், மண்ணிடை யவரொடு - மனிதர்
படையோடே, மயங்கி - கலந்து, நின்றதே - நிற்பதாயிற்று, (எ - று.)

     அச்சுவகண்டன் தம்பிமார்கள் கண்கள் சிவந்து களிறுகளைக் கையாற் சுட்டி
ஏவியவராய்ப் போர்க்களத்தே புகுந்தனர் ; அப்பொழுது அப்போர்க்களம் படைகளால்
நிரம்பி எள்ளிட இடமிலதாயிற்று என்க.

     எண் - எள்.

(263)

1394. இலைதடு மாறின பகழி யெங்கணும்
சிலைதடு மாறின சிலைத்த தேர்க்குழாம்
மலைதடு மாறின போல மான்றரோ
தலைதடு மாறின தடக்கை வேழமே.
 
     (இ - ள்.) இலை தடுமாறின பகழி - அம்புகள் தம் இலைகளோடு பகையம்பின்
இலைகள் தாக்கித்தள்ளாடின, எங்கணும் - போர்க்களமெங்கும், சிலைதடுமாறின -
வில்லொடு வில் பொருது தள்ளாடின, தேர்க்குழாம் சிலைத்த - தேர்க்கூட்டங்கள்
ஒன்றோடொன்று மோதி முழங்கின, தடக்கை வேழம் - வலிய துதிக்கையையுடைய
யானைகள், மான்று - போர் செய்து மயங்கி, மலைதடுமாறினபோல - மலைகள்
தள்ளாடுவது போன்று, தலை தடுமாறின - தலை தள்ளாட்டம் கொண்டன, (எ - று.)

     அவ்வழி, அம்புகள் தடுமாறின, விற்கள் தள்ளாடின, தேர்கள் ஆரவாரித்தன,
யானைகள் மயங்கித் தடுமாறின என்க.

(264)


     (பாடம்) 1 மயங்குவிப்பதே.