பக்கம் : 88
 

     (இ - ள்.) கய தலைக் களிற்றினாய் - மெல்லிய தலையையுடைய யானையை
உடையவனே! கங்குல் - இரவிலே; ஓர்கனாக் கண்டது உளது - நீ ஒரு கனாவினைக்
கண்டுள்ளாய்; நயந்து அது தெரியின் - விருப்பத்துடன் அக்கனாவினை ஆராய்ந்து
பார்த்தால்; ஓர்வேழம் - ஒரு யானை; விசும்பு அகத்து இழிந்து வந்து -
விண்ணிடத்தினின்றும் இறங்கிவந்து; நம்பி நளிகடல் வண்ணன் தன்னை - ஆண்மக்களிற்
சிறந்தவனும் பெரிய கடல்போன்ற கருநிறத்தை யுடையவனுமான திவிட்டனுக்கு;
வெண்போது சேர்ந்த தயங்கு ஒளிமாலை - வெள்ளிய பூக்களால் அமைந்த விளங்குகின்ற
ஒளியினை யுடைய மாலையை; சூட்டி - அணிந்து; தன் இடம் அடைந்தது - தனது
இடத்திற்குச் சென்றது. (எ - று.) அன்றே - அசை.

     கய, நளி என்பன பெருமையை உணர்த்தும் உரிச்சொற்கள். “தடவுங் கயவும் நளியும்
பெருமை“ என்பது தொல்காப்பியம். இச் செய்யுளால் அரசன் கண்ட கனா இன்னதென்று
குறிகாரன் எடுத்துக் கூறினான்.

( 37 )

கனாவின் பயனை நிமித்திகன் கூறுதல்

107. மன்மலர்ந் தகன்ற மார்ப மற்றதன் பயனுங் 1கேண்மோ
நன்மலர் நகைகொள் கண்ணி நம்பித னாம மேத்தி
மின்மலர்ந் திலங்கு பைம்பூண் விஞ்சைவேந் தொருவன்வந்து
தன்மக ளொருத்தி தன்னைத் தந்தனன் போகு மென்றான்.
 
     (இ - ள்.) மல் மலர்ந்து அகன்றமார்ப - மற்போர்செய்தலால் விரிந்த மார்பை
யுடையவனே; அதன்பயனும் கேண்மோ - அக்கனாவின் பயனையுங் கேட்பாயாக;
மின்மலர்ந்து இலங்கு பைம்பூண் - மின்னலைப் போல ஒளி பரந்து விளங்குகிற பசிய
அணிகலன்களை யணிந்த; விஞ்சை வேந்து ஒருவன் வந்து - வித்தியாதர அரசன் ஒருவன்
இவ்வுலகத்திற்குவந்து; நல்மலர் நகைகொள்கண்ணி - நல்ல மலரால் விளங்குதலையுடைய
மாலையை அணிந்த; நம்பி தன் நாமம் ஏத்தி - திவிட்டனது பெயரைப்புகழ்ந்து போற்றி;
தன்மகள் ஒருத்தி தன்னை - தன்மகள் ஒருத்தியை; தந்தனன்போகும் என்றான் -
மணஞ்செய்து கொடுத்துவிட்டுப் போவான் என்று கூறினான். (எ - று.) மற்று, தான்
அசைநிலைகள்.
 

     (பாடம்) 1. கேட்டி, கேட்பின்.