பக்கம் : 886
 
  திரையொடு கனைகடல் கலங்கிச் சிந்தின
புரையுடை விலங்கலும் புலம்பு கொண்டவே.
 
     (இ - ள்.) வரையொடு வரையென - தான் தூக்கிவந்த மலையோடே மற்றொரு
மலைபோல, மண்ணின்மேல் மறிந்து - பூமியின் மேலே புரண்டு, விரையுடை அலங்கலான்
- மணம் கமழும் மலர்மாலையணிந்த மணிகண்டன், வீழும் ஆயிடை - விழுந்த பொழுது,
கனைகடல் - ஒலிமிக்க கடல்களும், திரையொடு கலங்கிச் சிந்தின - பெரிய
அலைகளோடே குழம்பி நீரைச் சிதறாநின்றன, புரையுடை விலங்கலும் - குகைகளையுடைய
மலைகளும், புலம்பு கொண்டவே - எதிர் ஒலி செய்து முழங்கலாயின,
(எ - று.)

     அருக்ககீர்த்தியின் அம்பு பாய்ந்தவுடன் ஒரு மலையோடு மற்றொரு மலை வீழ்ந்தாற்
போன்று மணிகண்டன் தான் சுமந்து வந்த மலையோடே மண்ணில் வீழ்ந்தான்,
அப்பொழுது கடல்கள் துளும்பிக் கலங்கின, மலைகள் எதிரொலி எடுத்தன என்க.

(293)

 

மணிகண்டன் முதலியோர் மாண்டமை தூதர்
அச்சுவகண்டனுக்குக் கூறல்

1424. தம்பியர் பாடு மக்க ளிறந்ததுந் தனக்குப் பாங்காய்
வெம்பிய வீரர் போருள் விளிந்ததும் விரைவி னோடிச்
செம்பினை யுருக்கி வெய்தாய்ச் செவிமுதற் சொரிந்த தேபோல்
அம்பொன்செ யாழியானுக் குரைத்தன ரரக்குண் 1கோலார்.
 
     (இ - ள்.) அம்பொன் செய் ஆழியானுக்கு - அழகிய பொன்னாலியன்ற
உருட்படையுடைய அச்சுவகண்டனுக்கு. அரக்கு உண் கோலார் - அரக்கூட்டிய
கோலையுடைய தூதர்கள், விரைவின் ஓடி - விரைந்து ஓடிச்சென்று, செம்பினை வெய்தாய்
உருக்கி - செம்பை மிக்க வெப்பமுடையதாக உருக்கி, செவி முதல் சொரிந்ததேபோல் -
காதுகளிலே பெய்தாற்போலே, தம்பியர் பாடும் - மணிகண்டன் முதலிய நான்கு தம்பியரும்
மாண்டமையும், மக்கள் இறந்ததும் - கனகசித்திரன் முதலிய தன் மக்கள் இறந்தமையும்,
தனக்குப் பாங்காய் - தனக்குத் துணையாகச் சென்ற, வெம்பியவீரர் - சினங்கொண்ட தன்
மறவர் பலர், விளிந்ததும் - மாண்டமையும், உரைத்தனர் - எடுத்தியம்பினர், (எ - று.)
 
 

     (பாடம்) 1கோலோர்.