பக்கம் : 890
 
கூளிகளின் தன்மை
1429. பட்டடி நெடிய வீங்கு
     பரட்டின நொடிக்குங் கால
ஒட்டிய வயிற்ற வற்ற
     லுகிரிடை மயிர முன்கை
கட்டிய கண்ணி பீலித்
     தலையின கழற்காய் போல
வட்டமா யுருளுங் கண்ண
     கணங்கள்வந் திரைத்த வன்றே.
 
     (இ - ள்.) பட்டு அடி - பூமியிலே படும் உள்ளடி, நெடிய - நீளியவாயவும்,
வீங்குபரட்டின - பருத்த பரடுகளையுடையனவும், நொடிக்கும் கால - நுடங்குகின்ற
கால்களையுடையனவும், ஒட்டிய வயிற்ற - முதுகோடொட்டிய வயிற்றை உடையனவும்,
வற்றல் - வற்றிய உடலுடையனவும், உகிரிடை மயிர முன்கை - நகங்களிடத்தே
மயிர்செறிந்த முன் கைகளையுடையனவும், கட்டிய கண்ணி பீலித் தலையின - கட்டப்பட்ட
முடிக்கண்ணியையும் மயிற்பீலியையும் சூட்டிய தலையுடையனவும், கழற்காய்போல வட்டமாய்
உருளும் கண்ண - கழற்சிக் காயைப்போன்று வட்டவடிவினவாய் உருளாநின்ற விழிகளை
உடையனவும் ஆகிய, கணங்கள் வந்து இரைத்த அன்றே - பேய்க்கணங்களும்
அப்போர்க்களத்தே வந்து முழங்கின, அன்றே : அசை, (எ - று.)

     பட்டஅடி - பட்டடி என நின்றது. அடி நெடியவும் பரட்டினவும் காலவும் வயிற்றவும்
மயிரையுடைய முன்கையவும் தலையினவும் கண்ணவுமாகிய கணம் வந்திரைத்தன என்க.

(299)

 
சண்டவேகையின் மாயப் போர்
1430. வரைகளை யுருள வுந்தி
     1வந்ததோர் சண்ட வாயு
நிரைகிளர் சுடர தாகி
     நிமிர்ந்ததோ ருருவச் செந்தீ
திரைகளை மறிய வீசிச்
     சிறந்ததோ ரழுவ முந்நீர்
விரைகிள ருருவத் தெய்வ2ம்
     விளைத்தவா றிதுவா மன்றே.
 

     (இ - ள்.) வரைகளை உருள உந்தி - மலைகள் உருளும்படி தாக்கி, வந்தது ஓர்
சண்டவாயு - வீசியது ஒரு சூறைக்காற்று, நிரைகிளர் சுடரதாகி - ஒழுங்குபட்டுயர்கின்ற
பிழம்பையுடையதாய், நிமிர்ந்தது ஓர் உருவச்செந்தீ - உயர்ந்தெரிந்தது ஒரு நிறமுடைய
செந்நெருப்பு, திரைகளை மறிய வீசி - அலைகள் புரளும்படி எறிந்து, சிறந்தது ஓர்
அழுவமுந்நீர் - பெருகிற்று ஒரு ஆழியகடல், விரைகிளர் உருவத் தெய்வம் - மணம்மிக்க
உருவத்தை உடைய சண்டவேகை, விளைத்தவாறு இது - அப்போர்க்களத்தே தோற்றுவித்த
தன்மை, இத்தன்மைத்து, ஆம் - ஆகும், அன்றே : அசை,
(எ - று.)

 

     (பாடம்) 1வருமொரு. 2மிது படைவிடுத்தவாறே.