பக்கம் : 902
 

திவிட்டன் அச்சுவகண்டனை நகுதல்

1448. என்றலு மதனைக் கேட்டே யிருங்கடல் வண்ண னக்கு
நன்றுநன் றுரைத்தி மீட்டு நல்லையே பெரிது மேடா
குன்றின்மே லிருந்து நீநின் குழுவினுண் மொழிவ தல்லால்
இன்றுவந் தென்மு னின்று மிதுகொலோ கருதிற் றென்றான்.
 
     (இ - ள்.) என்றலும் அதனைக் கேட்டே - என்று அச்சுவகண்டன் கூறலும்
அம்மொழிகளைக் கேட்டு, இருங்கடல் வண்ணன் திவிட்டன், நக்கு - நகைத்து, நன்று
நன்று உரைத்தி - நன்று நீ நன்றே பேசுகின்றனை, மீட்டும் - மீண்டு் நினைக்குமிடத்தும்,
பெரிதும் ஏடா நல்லையே - அடே அச்சுவகண்டனே, நீ பெரிதும் நல்லையாகவே
காணப்படுகின்றனை, குன்றின்மேல் இருந்து - உன் மலையின் உச்சியிலே இருந்து, நின்
குழுவினுள் - உன்னை ஒத்த உன் கூட்டத்தாரூடே, மொழிவதல்லால் - இம்மொழிகளைக்
கூறி மகிழ்வதொழித்து, இன்று வந்து - உன் இறுதி நாளாகிய இற்றைக்கு வந்து, என்
முன்னின்றும் - உன் கூற்றுவனாகிய எனக்கு முன்னே நின்றும், நீ - அறிவில்லாத நீ, இது
கொலோ கருதிற்று - இவ்வாறோ கருதியது, என்றான் - என்று கூறினான், (எ - று.)

     அச்சுவகண்டனே ! உனக்கு இறுதியாகிய இற்றைநாள் நீ இவ்வாறு கருதுதல் உன்
பேதைமையே கண்டாய், பேதைமையாலே நீ பேசும் பேச்சு எமக்கு நகையே விளைத்தலின்,
நீ பெரிதும் நல்லை! என்று நம்பி நகைத்தான் என்க.
 

 (318)

 

அச்சுவகண்டன் போர் தொடங்கல்

1449. சிறியவ னுரைகள் வந்தென் செவிசுடும் பொறுக்க லாற்றேன்
எறிகடல் வளாகந் தன்னு ளிவன்பெய ரொழிப்ப னென்று
செறிமணிக் கடகக் கையாற் றிண்சிலை குழைய வாங்கிப்
பொறிநுதல் யானை மேலான் சரமழை 1பொழித லானான்.
 
    

     (பாடம்) 1 பொழிவிக்கின்றான்.