பக்கம் : 903
 

     கடல்வளாகந்தன்னுள் - அலையெறிகின்ற கடலாலே சூழப்பட்ட இவ்வுலகத்தே, இவன்
பெயர் ஒழிப்பனென்று - திவிட்டன் என்னும் இவன் பெயரை அழித்தொழிப்பேன் என்று,
செறிமணிக் கடகக் கையால் - மணிகள் செறிந்த கடகம்பூண்டதன் கையாலே, திண்சிலை
குழையவாங்கி - திண்ணிய தன் வில் பெரிதும் வளையும்படி வளைத்து, பொறி நுதல்
யானை மேலான் - புள்ளிகள் பொருந்திய நெற்றியை உடைய அரசுவாவின்மேல்
அமர்ந்துள்ள அச்சுவகண்டன், சரமழை - அம்புமழை, பொழிதலானான் - சொரிந்தான்,
(எ - று.)

     திவிட்டநம்பியின் நகைப்பாலே பெரிதும் வெகுண்ட அச்சுவகண்டன் இவனை
இப்போதே கொல்வேன் என்று வலிய வில்லை வணக்கிக் கணைமழை பொழிந்தான் என்க.

(319)

 

அச்சுவகண்டன் அம்புகளைக் கருடன்
சிறகால் வீசித் தடுத்தல்

1450. கடுத்தவ னெய்த போழ்திற்
     1கருடன்றன் சிறகு தன்னால்
புடைத்திட நெரிந்து பொங்கிச்
     சரங்கள் போய்ப் புரள நோக்கி
விடைத்திறல் விடலை தன்மேல்
     வெம்பிய மனத்த னாகிப்
படைத்திற லாளன் றெய்வப்
     படைத்தொழில் 2பயிற லுற்றான்.
 
     (இ - ள்.) கடுத்து அவன் எய்த போழ்தில் - விரைந்து அச் சுவகண்டன் அம்புகளை
ஏவிய பொழுது, கருடன் - கருடப்பறவை, தன் சிறகு தன்னால் - தன்னுடைய வலிய
சிறகுகளாலே, புடைத்திட - அவ்வம்புகளை வீசியடித்திட, நெரிந்து - நுறுங்கி, சரங்கள்
போய்ப் புரள நோக்கி - அம்புகள் பூமியில் விழுந்து புரண்டமையைப் பார்த்து,
விடைத்திறல் விடலை தன் மேல் - காளைபோலும் ஆற்றல் மிக்க திவிட்டன்மேல்,
வெம்பிய மனத்தன் ஆகி - சினத்தாலே புழுங்கிய மனம் உடையனாய், படைத்திறலாளன் -
படைப் பயிற்சியிலே மிக்க ஆற்றலுடைய அச்சுவகண்டன், தெய்வப் படைத்தொழில் பயிறல்
உற்றான் - கடவுட்டன்மையுடைய போர்க்கருவியாலாய
தொழில்களைஇயற்றத்தொடங்கினான், (எ - று.)

     அச்சுவகண்டன் பொழிந்த கணைமழையைக் கருடன் தன் சிறகாற் சிதறியவுடன்
அவன் கடவுட்டன்மையுடைய படைகளாலே போரிடத் தொடங்கினான் என்க.
 

(320)

 

அச்சுவகண்டன் அரவக்கணை விடுதல்

1451. காயிரும் பனைய வெய்யோன் கருமணி வண்ணன் றன்மேல்
ஆயிரம் பணத்த தாய வருமணி யாடு நாக
 

(பாடம்) 1 கருடனிற். 2படைக்கலுற்றான், பறைக்கலுற்றான்.