பக்கம் : 909 | | (இ - ள்.) புனைகதிர் ஆரமார்பன் - ஒப்பனை செய்யப்பட்ட ஒளிமிக்க முத்துவடங்கள் புரளும் மார்பையுடைய அச்சுவகண்டன், புகைந்து - திவிட்டன் மொழிகளைக் கேட்டு நெஞ்சழன்று, கைமுறுக்கிவிட்ட - தன் கையாலே சுழற்றி விசைத்து வீசிய, கனை கதிர்த்திகிரி - ஆரவாரமுடைய ஒளிருகின்ற அச்சக்கரப்படை, கான்ற - கக்கிய, கனசுடர் - கனவிய தீப்பிழம்பாலே, வளைக்கப்பட்டு - சூழ்ந்துகொள்ளப்பட்டு, முனை கதிர் கானச் செந்தீ - மண்டி எரிகின்ற சுடரையுடைய காட்டுத்தீ முழங்கி மேல் மூடப்பட்ட - ஆரவாரித்து மேலே மறைக்கப்பட்ட, வனைகதிர்க்குன்றம் போல - தோன்றுகின்ற ஒளியையுடைய மாணிக்கமலையைப் போன்று, மணிவண்ணன் - திவிட்டன், மறைதலானான் - மறைக்கப்பெற்றான், (எ - று.) நம்பியின் மொழிகேட்ட அச்சுவகண்டன் சினந்து ஆழியைச் சுழற்றி வீசினான்; அவ்வாழிப்படை, தீயைக் கக்கி வருதலால் நம்பி காட்டுத் தீயால் மறைக்கப்பட்ட குன்றம் போன்று அத் தீப் பிழம்பால் மறைக்கப்பட்டான் என்க. (329) | | | ஆழிப்படை திவிட்டனை வலம்வந்து வலப்பக்கத்தே பொருந்துதல் | 1460. | உலங்கொண்ட வயிரத் தோளாற் குற்றதை யுணர மாட்டார் நிலங்கொண்டு 1மனித ராழ 2நிரந்தழ 3லுமிழ்ந்து நேமி புலங்கொண்ட வயிரக் குன்றின் புடைவரும் பரிதி போல வலங்கொண்டு வந்து மைந்தன் வலப்புடை நின்ற தன்றே. | (இ - ள்.) உலங்கொண்ட வயிரத்தோளாற்கு திரள்கல்லை ஒத்த திண்ணிய தோளையுடைய திவிட்டனுக்கு, உற்றதை - நிகழ்ந்ததனை, உணரமாட்டார் - அறியவியலாதவராய், மனிதர் - திவிட்டனுடைய படைஞர் ஆகிய மாந்தர்கள், நிலங்கொண்டு - பூமியிலே விழுந்து, ஆழ - துயரவெள்ளத்தே மூழ்கா நிற்ப, நேமி - அச்சக்கரப்படை, நிரந்து அழல் உமிழ்ந்து - பரவும்படி தீயைக் கக்கிக்கொண்டு, புலம்கொண்ட வயிரக்குன்றின் - அறிவினைக் கவர்ந்து கொள்ளும் மாணிக்கமலையை, புடை வரும் பரிதிபோல - புடைசூழ்ந்துவரும் செஞ்ஞாயிற்று மண்டிலத்தைப் போன்று, வலங்கொண்டு வந்து - திவிட்டனை வலஞ்சூழவந்து, மைந்தன் வலப்புடை நின்றது -திவிட்டனுடைய வலப்பாகத்தே பொருந்திற்று, அன்று, ஏ : அசைகள், (எ - று.) அவ் வமயத்தே திவிட்டன் படைஞர் திவிட்டனுக்கு யாது நேர்ந்த தென்று அறியாதவராய்ப் பூமியிலே விழுந்து துன்பத்தே அழுந்தினர். |
| (பாடம்) 1மனிச. 2நீரழ. 3லுமிழ. | | |
|
|