பக்கம் : 910
 
     அவ் வாழிப் படையோ மலையினை வலம் வரும் ஞாயிற்று மண்டிலம் போலே
நம்பியை வலம் வந்து அவனுடைய வலக்கையிலே பொருந்திற்றென்க.

(330)

 

திவிட்டன் அவ் வாழிப்படையே ஏவி
அச்சுவகண்டனையும் யானையையும் அழித்தல்

1461. கன்னவில் கடகத் தோளான் கண்டுகை தொழுது கொண்டு
மின்னவிர் விளங்கு நேமி 1விடுத்தனன் விடுத்த லோடும்
மன்னனை மார்பு 2கீண்டு மணிமுடி யெறிந்து மற்றைப்
பொன்னவி ரோடை யானைப் புகர்நுதற் 3புக்க தன்றே.
 
     (இ - ள்.) கல் நவில் கடகத்தோளான் - மலையை ஒத்த கடகஞ்செறித்த
தோள்களையுடைய திவிட்டன், கண்டு கை தொழுது கொண்டு - தன் மருங்கு வந்த
அவ்வாழியைப் பார்த்துக் கைகூப்பி வணங்கி அதனை வலக்கையின் ஏந்திக்கொண்டு, மின்
அவிர் விளங்கும் நேமி - ஒளி பரப்பித் திகழ்கின்ற அவ்வாழிப்படையை, விடுத்தனன் -
அவ் வச்சுவகண்டன்மேல் ஏவினான், விடுத்தலோடும் - ஏவியவுடனே, மன்னனை -
அச்சுவகண்டனை, மார்புகீண்டு, அவ்வாழி சென்று மார்பினைப் பிளந்து, மணிமுடி எறிந்து
- மணிகள் அழுத்தப்பட்ட முடியணிந்த தலையையும் அரிந்து, பொன் அவிர் ஓடையானை
புகர்நுதல் புக்கது அன்றே - பொன்னாலியன்ற விளக்கமுடைய முகபடாமணிந்த
அச்சுவகண்டன் யானையினது புள்ளிகள் அமைந்த நெற்றியினும் புகுந்தது, அன்று, ஏ :
அசைகள், (எ - று.)

     நம்பி, அவ்வாழியைத் தொழுது அவ்வச்சுவகண்டன்மேலே ஏவினனாக, அவ்வாழி,
அச்சுவகண்டன் மார்பினைப் பிளந்து, தலையை அரிந்து, அவன் ஏறிய யானையின்
முகத்தினும் புக்க தென்க.

(331)

 
அச்சுவகண்டன் யானையினின்றும் வீழ்தல்
1462. கழலவன் கனன்று விட்ட கதிர்நகை நேமி போழ
மழகளி யானை தன்மேன் மறிந்துவீழ் கின்ற மன்னன்
நிழலவிர் விலங்க னெற்றி நிமிர்ந்ததோர் காள மேகம்
அழலவன் றிகிரி பாய வற்றுவீழ் கின்ற தொத்தான்.
 

(பாடம்) 1விட்டனன். 2கண்டம் மணிமுடி யோடு வந்து. 3புரண்ட.