பக்கம் : 912
 

இதுமுதல் 5 செய்யுள்கள் கண்டோர் கூற்றாய்,
காஞ்சித் திணையின்பாற்பட்ட ஒரு தொடர்

 

வேறு

1464. கொலையானை மேலோர் குளிர்வெண் குடைக்கீழ்ப்
பலயானை மன்னர் பலர்போற்ற வந்தான்
மலையாகம் போழாக மற்றிவனோ சாய்ந்தான்
நிலையாமை சால நிலைபெற்ற தன்றே.
 
(இ - ள்.) கொலையானை மேலோர் குளிர் வெண்குடைக் கீழ் - கொலைத் தொழில்வல்ல
ஒப்பற்ற அரசுவாவின் எருத்தத்தே குளிர்ந்த திங்கள் வெண்குடை நிழலின்கண் அமர்ந்து,
பல யானை மன்னர் பலர்போற்ற - பலவாகிய யானைகளையுடைய வேந்தர்பலர் புகழ்ந்து
பாராட்ட, வந்தான் - ஆரவாரத்தோடு வந்த அச்சுவகண்டன், மற்று இவன் ஓ - இங்ஙனம்
வந்த அச்சுவகண்டனும் அந்தோ, மலையாகம் போழ் ஆகச் சாய்ந்தான் - மலைபோன்ற
தனது மார்பகம் பிளவுகளாக இறந்தொழிந்தான், நிலையாமை சால நிலைபெற்றது அன்றே -
இந்நிகழ்ச்சியால் இவ்வுலக வாழ்க்கையின் நிலையுதலில்லாத்தன்மை, அறிந்தோர் உளத்தே
நன்கு நிலைபெற உணர்த்தப்பட்டது, அன்று, ஏ : அசைகள், (எ - று.)

     இது யாக்கை நிலையாமையும் செல்வ நிலையாமையும் கூறிற்று.

     “பாங்கரும் சிறப்பின் பல்லாற் றானும்
     நில்லா வுலகம் புல்லிய நெறித்தே“

     என்ப தோத்தாகலின் (தொல். பொருள் புறத். சூ. 78) இவை காஞ்சித்
திணையின்பாற்பட்டன.

     “யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச்
     சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை
     வினையுலப்ப வேறாகி வீழ்வார்தாங் கொண்ட
     மனையாளை மாற்றார் கொள“ (நாலடி, செல்வநி - 3)

     என்ற இந்நாலடியை ஈண்டு ஒப்பு நோக்குக.

(334)

 
1465. நெருநல் நெடுங்குடைக்கீழ் நேமி முன்செல்லப்
பொருநல் வயவேந்தர் போற்றிசைப்ப வந்தான்
செருநன் மறநேமி சென்றதுவே போழ
எரிபொன் மணிமுடியா னின்றிவனோ சாய்ந்தான்.