பக்கம் : 922
 

     (இ - ள்.) பணங்கொள் நாகம் பலசூழ்ந்து - படத்தையுடைய நாகம் ஆகிய
பவணதேவர்கள் பலர், நினக்கஞ்சி நின்னைச் சூழநின்று, பகல் செய்மணியின் சுடர் ஏந்தி -
பகலைச் செய்கின்ற தங்கள் மணியாகிய விளக்கை ஏந்தினராய், அணங்கி - வருந்தியும்,
அகலாது - நின் ஆணை கடந்து செல்ல அஞ்சி நீங்காதவராய், உழை நிற்கும்
ஆணையுடைய - நின் பக்கத்தே நிற்றற்குக் காரணமான ஆணை ஆற்றலுடைய,
அடல்வேந்தே - வெற்றியையுடைய வேந்தனே, வணங்கி வந்து பல தெய்வம் வழிபாடு
ஆற்றும் - வணக்கத்துடனே நின் குறிப்பின் வழிவந்து நினக்கு இங்ஙனம் பல தெய்வங்கள்
வழிபாடு செய்கின்ற, மறைநேமி - மந்திர மொழியையுடைய சக்கரமாகிய, குணங்கொள்
படையாய் - குணமிக்க படையை ஏந்துபவனே, கூடாரும் நினக்கு உளரோ - நீ
போதற்குரிய பகைவரும் அத்தேவர் உலகில் இன்னும் உனக்கு உளராகின்றனரோ
உரையாய், கோமானே - எங்கள் தலைவனே, (எ - று.)

     பவணதேவராகிய நாகரும் நினக்கு அஞ்சி அகலாது மணிவிளக்கேந்தி நிற்பர், வேறு
பல தேவர்களும் உன்னை வழிபட்டொழுகாநிற்பர், ஆழிப்படையுடைய நினக்குப்
பகையாவார் அத்தேவரில் யாருளர் என்றார் என்க. (உளராயினன்றோ நீ அங்குச்
செல்லவேண்டும் என்றபடி.)

(349)

 
1480. பெருமா மழைக்கண் மாதேவி
     பிணையின் மாழ்கி யிவணழிய
வருமா முரசம் பிறர்பெயர்கொண்
     டறைய வாழி யயனீங்கத்
திருமா 1நகரஞ் செல்வ முற்றுஞ்
     சிதையக் கண்டுஞ் சீறாயால்
உருமா லென்னுந் திறலினா
     யுலகம் வேண்டா 2தொழிந்தாயே.
 
     (இ - ள்.) பெருமா மழைக்கண் மாதேவி - பெரிய கரிய குளிர்ந்த கண்களையுடைய
உன் கோப்பெருந்தேவி, பிணையின் மாழ்கி - மான்பிணை போலே வருந்தி, இவண் அழிய
- இவ்விடத்தே உயிர் நீப்பவும், வரும் மாமுரசம் - முழக்கி வருகின்ற பெரிய
வெற்றிமுரசமானது, பிறர் பெயர்கொண்டு - உனது பகைவர்களின் பெயர்களை
மேற்கொண்டு, அறையா - முழக்கா நிற்கவும், ஆழி - உனது சக்கரப்படை, அயனீங்க -
உன் மாற்றானிடத்தே செல்லா நிற்பவும், திருமா நகரம் - உனது இரத்தின பல்லவ
நகரத்தின்கண், செல்வம் முற்றும் சிதைய - நீ படைத்த நிதி முழுதும் சிதைந்தொழியவும்,
கண்டும் - இவையிற்றை நீ நேரிற் கண்டு வைத்தும், சீறாயால் - ஒரு சிறிதும்
சினந்தாயில்லை, உரும் என்னும் திறலினாய் - இடியேறு போன்ற ஆற்றலுடையோனே,
உலகம் வேண்டாது ஒழிந்தாயோ - இவ்வுலக வின்பத்தை முழுமுற்றும் வெறுத்து விட்டு்ச்
சென்றுவிட்டாயோ, கூறாய், (எ - று.)
 

     (பாடம்) 1 நகரும். 2 தொழிந்தாயோ.