பக்கம் : 929
 
 
திவிட்டன் பாசறை எய்துதல்
1490. கருமுகில் வண்ணனுங் 1கருடன் மேலிழிந்
துருமென வதிர்தரு மோடை யானைமேற்
பொருமிகல் வேந்தர்போற் றிசைப்பப் போந்தரோ
பரிமிகு படைவிடு பாடி நண்ணினான்.
 
     (இ - ள்.) கருமுகில் வண்ணனும் - இவ்வாறு கட்டளையிட்டருளிய பின்னர்த்
திவிட்டநம்பியும், கருடன்மேல் இழிந்து - கருடவூர்தியினின்றும் இறங்கி, உரும் என
அதிர்தரும் - இடி போலப் பிளிறுகின்ற, ஓடையானை மேல் - முகபடா மணிந்த
யானையின் மேலே, பொரும் இகல் வேந்தர் போற்று இசைப்ப - தன்னைப்
போரிட்டழித்தற்கு வந்த பகைவராகிய விச்சாதர மன்னரே புகழ்ந்து வாழ்த்தெடுப்ப, போந்து
- வந்து, பரிமிகு படைவிடு பாடி நண்ணினான் - புரவிகள் மிக்க படைகள் தங்கும்
பாசறையை எய்தினான், (எ - று.)

     நம்பி முரசறைய ஏவிய பின்னர்க் கருடன் தோளினின்றும் இறங்கி யானையேறி
மன்னர் போற்றெடுப்பப் படைவீட்டை எய்தினான் என்க.

(360)

 
விசயனும் திவிட்டனும் பயாபதியை வணங்கல்
1491. விரிதரு திங்களின் விளங்கு மேனியன்
பெரியவன் றன்னொடும் பெயர்ந்து தாதைதன்
றிருவமர் சேவடி சென்று தாழ்ந்தனன்
கருவரை யனையதோட் கனபொற் றாரினான்.
 
     (இ - ள்.) விரிதரு திங்களின் - நிலாவிரிக்கும் திங்கள் மண்டிலத்தைப் போன்று,
விளங்கும் மேனியன் - திகழ்கின்ற திருமேனியை உடையவனாகிய, பெரியவன் றன்னொடும்
- தன் அண்ணனாகிய விசயனுடனே, பெயர்ந்து - சென்று, தாதை தன் - பயாபதி
மன்னனுடைய, திருவமர் சேவடி - திருமகள் விரும்புதலையுடைய செவ்விய அடிகளிலே,
சென்று தாழ்ந்தனன் - அடைந்து வணங்கினான், கருவரை அனைய தோள் கன பொன்
தாரினான் - கரிய மலைபோலும் திண்ணிய தோள்களையுடைய கனவிய பொன்னாலியன்ற
மாலையணிந்த திவிட்ட நம்பி, (எ - று.)

     திரு - அழகுமாம்.

     பின்னர் நம்பி விசயனுடனே சென்று தாதையாகிய பயாபதியின் சேவடியை
வணங்கினான் என்க.

(361)

 

     (பாடம்) 1கருடனின்றிழிந்