பக்கம் : 931
 
முடிசூட்டு விழா முரசறைதல்
1494. என்றவன் மொழிதலு மிலங்கு நீண்முடி
மின்றவ ழவிரொளி விஞ்சை வேந்தனோ
டொன்றிய வரசர்க ளுவந்து 1கூறினார்
அன்றவர்க் கரசியின் முரச மார்த்தவே.
 
     (இ - ள்.) என்று அவன் மொழிதலும் - என்று அப் பயாபதி வேந்தன் கூறியவுடனே,
இலங்கு நீள்முடி - திகழ்கின்ற நீண்டமுடியையும், மின் தவழ் அவிர் ஒளி - மின்னலைப்
போன்று தவழ்ந்தொளிரும் இயற்கை ஒளியையும் உடைய, விஞ்சை வேந்தனோடு - சடி
மன்னனோடே, ஒன்றிய அரசர்கள் - பொருந்திய ஏனை மன்னர்களும், உவந்து - பெரிதும்
மகிழ்ந்து, கூறினர் - வழி மொழிந்து நின்றனர், அன்று - அற்றை நாளிலேயே, அவர்க்கு -
விசயதிவிட்டரின் முடிசூடற் பொருட்டு, அரசியல் முரசம் - அரசியற் செய்தியை
அறிவிக்கும் முரசம், ஆர்த்தவே - முழங்கின (எ - று.)

     கூறினார் என்றது வழிமொழிந்தனர் என்றவாறு.

     தன் மக்களின் முடிசூட்டு விழாவினையும் காண விரும்புகின்றேன் என்று
பயாபதிமன்னன் கூறியவுடன் சடிமுதலிய வேந்தர்களும் வழி மொழிந்தனர். அவ்வழி
அன்றே முடிசூட்டு விழாவினை முரசறைந்து நகர்க்கு அறிவித்தனர் என்க.

 (364)

 
விசயதிவிட்டரை மங்கல நீராட்டல்
1495. கங்கையுஞ் சிந்துவு2ங் கருது மாநதி
3தங்குநீ ரெனையவுந் தந்து தாமரை
பொங்கிய முகத்தபொற் 4குடங்க ளாற்பல
மங்கல மரபினான் மன்ன ராட்டினார்.
 
     (இ - ள்.) கங்கையும் சிந்துவும் - கங்கைப் பேரியாற்றினும் சிந்துப் பேரியாற்றினும்,
கருதும் மாநதி - இன்னோரன்ன தெய்வத்தன்மையுடையவாய்க் கருதப்படும் பிற
பேரியாறுகளினும், தங்குநீர் எனையவும் - பொருந்திய நீர் எத்துணையும், தந்து -
கொணர்ந்துதரப்பட்டு, பொங்கிய தாமரை முகத்த - மலர்ந்த தாமரை வடிவிற்றாய்ச்
செய்யப்பட்ட முகத்தையுடைய, பொற்குடங்களால் - பொன்னாலியன்ற குடங்களாலே, பல
மங்கல மரபினால் - பலவாகிய மண்ணுமங்கல முறைகளாலே, மன்னர் - வேந்தர்கள்,
ஆட்டினார் - விசயதிவிட்டர்களை மங்கல நீராட்டினர், (எ - று.)
 

     (பாடம்) 1 சூட்டினார். 2மென்னு. 3தங்கிய தடத்துள்நீர். 4 கடங்க.