பக்கம் : 932
 

     கங்கை முதலிய கடவுள் யாற்று நீரைப் பொற்குடங்களிலே கொணர்ந்து அரசர்கள்
முறைப்படி விசயதிவிட்டர்களுக்கு மண்ணுமங்கல விழாச் செய்தனர் என்க.

 (365)

 

திவிட்டற்கு நீராட்டற் சிறப்பு

1496. திருமணி நிழலொளித் தெய்வ வான்படை
பருமணிப் பாற்கடற் பரவை நீர்முகந்
தெரிமணிக் குடங்களி னேந்தி யேந்தறன்
சுரிமணிக் குஞ்சிமேற் சொரிந்த தென்பவே.
 
     (இ - ள்.) திருமணி நிழல் ஒளி - சிறந்த மணிஒளிபோன்ற ஒளியையுடைய, வான்
தெய்வப்படை - வானத்தே உறைகின்ற தேவர்குழாம், பருமணி பாற்கடல் - பரிய
மணிகளையுடைய திருப்பாற்கடலின்கண்ணே, பரவை நீர் முகந்து - பரவியுள்ள பாலாகிய
நீரை முகந்து, எரிமணிக் குடங்களின் ஏந்தி - ஒளிருகின்ற மணிகள் இழைத்த
பொற்குடங்களிலே தாங்கிக் கொணர்ந்து, ஏந்தல் தன் - திவிட்டனுடைய, சுரி
மணிக்குஞ்சிமேல் -சுருண்ட நீல மணிபோன்ற தலைமயிர் முடியின்மேலே, சொரிந்தது
என்பவே - பொழிந்தது என்று புலவர் கூறுவர், (எ - று.)

     புராணப் புலவர்கள் தெய்வக்குழாம் திருப்பாற்கடலின்கட் பாலை மணிக்குடத்தே
கொணர்ந்து திவிட்டற்கு நீராட்டினர் என்றும் கூறுப என்று தேவர் கூறுகின்றனர் என்க.

(366)

 

இதுவுமது

1497. வெந்திறல் விறலொளி விஞ்சை வேந்தரு
மந்தர மணிமலை மலரு மம்மலை
யந்தர வருவியும் விரவி யாட்டினா
ரிந்திர னனையவற் கிறைஞ்சி யென்பவே.
 
     (இ - ள்.) வெந்திறல் விறல் ஒளி - வெவ்விய ஆற்றலையும் வெற்றியையும்
புகழையும் உடைய, விஞ்சை வேந்தரும் - விச்சாதர மன்னர்களும், மந்தர மணிமலை
மலரும் - மந்தரம் என்னும் மாணிக்கமலையின்கண் உள்ள தெய்வமலர்களையும், அம்மலை
அந்தர அருவியும் - அந்த மலையிடையே வீழுகின்ற அருவி நீரையும், விரவி - கலந்து,
இந்திரன் அனையவற்கு - தேவேந்திரனை ஒத்த திவிட்டனுக்கு, இறைஞ்சி - தெய்வம்
பராய், ஆட்டினர் என்பவே - மங்கல நீராட்டினர் என்று புலவர் கூறுவர்,
ஏ: அசை, (எ - று.)

     விச்சாதரர் மலைநாட்டிலுள்ள அருவி நீரையும் மலர்களையும் கொணர்ந்து நம்பிக்கு
நீராட்டினர் என்ப என்க.

(367)