பக்கம் : 940
 

     புராணத்தே, எதிர்கால நிகழ்ச்சியைத் தம் தெய்விக அறிவால் அறிந்து முன்னரே
கூறிவைத்த வரலாற்றினைத் திவிட்டன் முன் கூறுகின்ற புலவர்கள், அது அவனுடைய
வரலாறே என்று அவன் அறியாதவாறு மறைத்துக் கூறுகின்றமைகேட்டு, இத்தகைய பெருஞ்
செயலைச் செய்தாரும், சக்கர முதலிய அருங்கலங்களைப் பெற்றாரும் பண்டும்
இவ்வுலகத்தே இருந்தனர் போலும் எனச் செருக்கடங்கினான் என்க.

(380)

 

திவிட்டன் குன்றெடுக்கச் செல்லல்

1511. அறிபவ ரவையவை மொழியக் கேட்டலும்
நெறிபடு 1நீதிமே னிறைந்த சிந்தைய
னெறிகடற் படையினோ டெழுந்து சென்றரோ
குறுகினன் கோடிமா சி2லைவன் குன்றமே.
 
     (இ - ள்.) அறிபவர் - புலமையாளர், அவை - அவ்வரசவையின்கண், அவை -
அப்புராணப் பொருள்களை, மொழியக் கேட்டலும் - எடுத்து விளம்பக் கேட்டவுடனே,
நெறிபடு நீதி மேல் நிறைந்த - வரலாற்று முறையிலே வரும் அவ்வாசுதேவர் செயலாகிய
நீதிமேல் தானும் செல்லுதலையே எண்ணிய, சிந்தையன் - நெஞ்சத்தையுடையனாய், எறிகடற்
படையினோடு அலை வீசுகின்ற கடல்போன்ற பெரும்படையோடே, எழுந்து சென்று -
அரண்மனையினின்றும் புறப்பட்டுப்போய், மா சிலை வன்கோடிக்குன்றம் குறுகினன் -
பெரிய எதிரொலியையும் வன்மையையுமுடைய கோடிக்குன்றம் என்னுமொரு மலையினை
எய்தினான், (எ - று.)

     சிலை - ஒலி - கல்லுமாம்.

     பண்டு புராணத்தே கூறப்பட்ட வாசுதேவர் குன்றமெடுத்துப் புகழ் கொண்டவாறு
யானும் குன்ற மெடுப்பல் என நம்பி படையினோடே கோடிக்குன்றத்தை எய்தினான் என்க.

(381)

 

திவிட்டன் கோடிக்குன்றம் எடுத்தல்

1512. எரிமணிக் கடகக்கை யிரண்டு மூன்றியப்
பெருமணி நிலம்பில மாகக் கீழ்நுழைத்
தருமணி நெடுவரை யதனை யேந்தினான்
றிருமணி நெடுமுடிச் செல்வ னென்பவே.
 
 

     (பாடம்) 1 நிதியமே. 2 யின்.