பக்கம் : 941
 

     (இ - ள்.) எரிமணிக் கடகக் கை இரண்டும் ஊன்றி - ஒளிருகின்ற வாகுவலயம்
செறித்த தன் இருகைகளையும் நிலத்திலே ஊன்றி, அப்பெரு மணி நிலம் பிலமாகக் கீழ்
நுழைத்து அம்மலையடிப் பகுதியாகிய நிலம் குகைபோன்று பிளக்கும்படி கைகளைக் கீழே
புகப் பாய்ச்சி, அருமணிநெடுவரை அதனை ஏந்தினான் - பெறற்கரும் மணிகளையுடைய
நெடிய அம்மலையை அகழ்ந்தெடுத்துத் தனது கையகத்தே ஏந்தி நிற்பானாயினன், திருமணி
நெடுமுடிச் செல்வன் என்பவே - நன்மை மிக்க மணிகளாலியன்ற நீண்ட முடியணிந்த
செல்வமிக்க திவிட்ட நம்பி என்று அறிஞர்கள் இயம்புவர், (எ - று.)

     திருமணி நெடுமுடிச் செல்வனாகிய நம்பி தன் கடகக்கை யிரண்டும் ஊன்றி
நிலம்பிலமாகக் கீழ்நுழைத்து அக் கோடிக்குன்றமென்னும் அருமணி நெடுவரையை ஏந்தி
நின்றனன் என்க.

(382)

 

இதுமுதல் செய்யுள்கள் குன்றேந்துதற்
சிறப்புக் கூறும் ஒருதொடர்

1513. கைந்நிலம் புகநுழைந் தெடுப்பக் கல்லென
மைந்நில நெடுவரை மறிய மற்றதன்
செந்நில முழைமுகஞ் சிலம்புஞ் சீரினால்
அந்நிலம் வாய்திறந் தழைப்ப தொத்ததே.
 
     (இ - ள்.) கை நிலம்புக நுழைந்து எடுப்ப - திவிட்டனுடைய கைகள் நிலத்தினூடே
புகுந்து அம்மலையினைப் பெயர்த்துத் தூக்கியபொழுது, மைநில நெடுவரை - முகில்கள்
தங்குகின்ற நெடியவக் கோடிக்குன்றம், “கல்Ó என மறிய - கல் என்னும் ஓசையுடனே
பெயர்ந்ததாக, மற்றதன் - அம்மலையின், செந்நில முழைமுகம் - செவ்விய அடிநிலத்தில்
உண்டாகிய பிலத்தின்கண், சிலம்பும் சீரினால் - முழக்கம் உண்டாகும் தன்மையாலே,
அந்நிலம் - அவ்வடி நிலம், வாய்திறந்து - ஆற்றாதே தன் வாயைத் திறந்து, அழைப்பது
ஒத்தது - ஓலமிடுவதை ஒத்தது. (எ - று.)

     நிலவு - ஈறுகெட்டு நில என நின்றது.

     நம்பி கைநிலம் புகுந்து பெயர்த்தபொழுது குகைகளையுடைய அம்மலையில்
உண்டாகிய “கல்Ó எனும் ஒலி, அந்நிலம் வாய்திறந்து அழைப்பதை ஒத்தது என்க.

(383)

 
1514. பிலங்களு ளுறைவன பெரிய நாகத்தின்
புலங்கெழு திரட்சிய புச்சந் தாழ்வன
அலங்கலா னெடுத்திட வகழ்ந்தெ ழுந்தவவ்
விலங்கலின் விழுகதிர் வேர்க ளொத்தவே.