பக்கம் : 943
 

     (இ - ள்.) தடவரைத் தாழ்வர் வாய்எலாம் - அக்கோடிக் குன்றமாகிய வலிய
மலையின் தாழ்வரை யிடமெங்கும், குழுமிய தழுவிய கொழுமுகில் - திரண்டவாய்த்
தழுவுதலையுடைய கொழுத்த முகில்கள், வழுவி வீழ்வன - அம்மலையைத் தூக்கிய பொழுது
நழுவிக் கீழே விழுந்தவை, செழுவரை - செழிப்புடைய அக்கோடிக்குன்றம், முன் - முன்னர்,
செறிய உடுத்த - பொருந்தும்படி உடுத்திருந்த, செந்துகில் - செவ்விய ஆடை, அழிவன -
நழுவுவனவாகி, அருகுவந்து - பக்கத்தே வீழ்ந்து, அசைந்தது ஒத்தவே - கிடந்ததைப்
போன்றது, (எ - று.)

     அக் கோடிக் குன்றத்தின் மிசை படிந்திருந்த முகில்கள் நழுவி வீழ்ந்ததோற்றம்,
அக்குன்றம் உடுத்த செவ்விய துகில் நழுவி வீழ்ந்ததைப் போன்றது என்க.

 (386)
 
 
1517. ஒன்றுதன் செறிகுறங் கூன்றிக் கைத்தலம்
ஒன்றினா னொளிவரை யுயர வேந்துபு
1நின்றன னெடியவ னீல மாமணிக்
குன்றமோர் குன்றங்கொண் டெழுந்த தொப்பவே.
 
     (இ - ள்.) ஒன்றுதன் செறி குறங்கு ஊன்றி - ஒரு கையைத் தனது திரண்ட
தொடையிலே ஊன்றிக்கொண்டு, கைத்தலம் ஒன்றினால் - எஞ்சிய ஒரு கையாலே,
ஒளிவரை உயர ஏந்துபு - ஒளிமிக்க அம்மலையை உயர்த்துத் தூக்கி, நெடியவன் -
நெடுமாலாகிய திவிட்டன், நீலமாமணிக்குன்றம் - ஒரு சிறந்த மரகத மலையானது, ஓர்
குன்றங்கொண்டு எழுந்தது ஒப்பவே - மற்றொரு மலையை ஏந்திக்கொண்டு எழுந்ததைப்
போன்று, நின்றனன் - நிற்கலானான், (எ - று.)

     நம்பி, தன் ஒரு கையைத் தொடையிலே ஊன்றி, மற்றொரு கையால் அக்குன்றத்தை
உயர்த்தேந்தி நின்ற தோற்றம், ஒரு மரகத மலை மற்றொரு மலையை ஏந்தி நின்றாற்போற்
றோன்றியதென்க.

(387)

 

வேறு

1518. பொருமாலை வேலரசர் போற்றிசைப்பப் பூவின்
அருமா மழைபெய் தமருலக மார்ப்பக்
கருமா னெடுவரையோர் கைத்தலத்தி னேந்தித்
திருமா மணிவண்ணன் செம்மாந்து நின்றான்.
 
 

     (பாடம்) 1 நின்றனன். கொடியவன்.