(இ - ள்.) தாம் மரை தங்கும் - தாவுகின்ற மான்கள் வதிகின்ற, தண் புனம் - குளிர்ந்த தினைப்புனங்கள், வேலி - வேலிபோலச் சூழப்பெற்றுள்ள, தடம் நீந்தி - அக்குறிஞ்சியிடத்தைக் கடந்து, தாமரை தங்கும் - தாமரை மலர்கள் பொருந்திய, தண்புனல் - குளிர்ந்த நீர்நிலை மிக்க, நல் நாட்டு அகம் எய்தி - நல்ல நாட்டினூடே அடைந்து, அரை தாம் தங்கும் தண்சுடர் ஒண்பொன் கலை நல்லார் - இடையிடத்தே பொருந்திய குளிர்ந்த ஒளியையுடைய அழகிய பொன்னாலியன்ற மேகலையணிந்த மகளிர்கள், தாமரை தங்கும்தண் புகழ்பாட - தாமரை யளவிற்றாகத் தங்கிய குளிர்ந்த புகழ்களைப் பாடிப் புகழா நிற்ப, தகை பெற்றான் - பெருந்தகைமையைத் திவிட்டன் எய்தினான், தாம்: அசை, (எ - று.) மூன்றாமடியில் தாமரை என்பதன்கண் தாம் அசைச்சொல். நாலாமடியில் தாமரை - ஓர் எண். கலை மேகலையணி. நம்பி யானையேறிக் குறிஞ்சியைக் கடந்து புனனாட்டகத் தெய்தி, தாமரை என்னும் அளவிற்றாய தன் புகழ்களை மேகலையணிந்த மகளிர்கள் பாடத் திகழாநின்றான் என்க. |
(இ - ள்.) மாலை தண் கேழ் மாமதி போலும் - அந்திப் பொழுதிலே தோன்றும் குளிர்ந்த ஒளியையுடைய முழுத் திங்களைப் போன்றதும், தண் கேழ் மாமணி முத்த மாலை - குளிர்ந்த நிறங்கெழுமிய சிறப்புடைய மணியாகிய நித்தில மாலையாலே அணி செய்யப் பெற்றதுமாகிய, குடைநீழல் - குடையினது நிழலின்கண், மகிழ்வெய்தும் - மனமகிழ்ந்து வாழாநின்ற, மாலை - மரபினையுடைய, தண்கேழ் வண்புனல் நாடார் - குளிர்ந்த நிறமமைந்த வளந்தருகின்ற நீர் நாட்டில் வாழும் மக்களாகிய, மால் ஐ தண் கேழ் மால் கடல் வட்டம் - கரிய அழகையுடைய குளிர்ந்த நிறமமைந்த பெரிய கடல் போலும் கூட்டம் வட்டமாக வளாயிற்று - திவிட்டனைச் சூழ்ந்தது, (எ - று.) |