பக்கம் : 955
 

     மூங்கிலைச் சினக்கின்ற பணைத் தோளிலே, வெண்சந்தனம் பூசி, முத்தணிந்து,
உத்தரீயமிட்ட மகளிர் உழைநின் றேத்த, விமானத்தின் அகத்தேயுள்ள, வரைமன்னன்
மகளாகிய சுயம்பிரபையையும், இனிக் காண்போம், வாருங்கோள்! என்றார், என்க.

 (404)

 
1535. அருமணிநீள் விமானத்தி னாகாயப்
     பளிங்கியன்ற விளிம்பி னாலும்
திருமணியி னொளிமேனி நிழலெறிப்பத்
     திகழ்ந்திலங்குந் தெய்வப் பாவை
கருமணியின் கதிர்குழற்றிக் கடைசுருட்டிக்
     கைசெய்து வளர்த்த போலும்
புரிமணியொண் குழறிகழப் பொன்னணைமே
     லினிதிருந்த பொலிவு காண்மின்.
 
     (இ - ள்.) அருமணி நீள் ஆகாய விமானத்தின் - அரிய மணிகள் பதித்த நீளிதாய
வானவூர்தியின், பளிங்கு இயன்ற பளிங்கினாலே இயற்றப்பட்ட, விளிம்பினாலும் -
விளிம்புகள் ஒளி வீசுதலாலும், திருமணியின் - அழகிய மணிநிறங்கொண்ட, ஒளி மேனி -
ஒளியையுடைய திருமேனி, நிழல் எறிப்பு - ஒளி வீசுதலாலும், திகழ்ந்து இலங்கும் -
விளங்கி ஒளிர்கின்ற, தெய்வப் பாவை - தெய்வமகள் போன்ற சுயம்பிரபை, கருமணியின் -
நீலமணியினது, கதிர் குழற்றி - சுடர்களைக் குழலச் செய்து, கடைசுருட்டி - நுனியைக்
சுருளும்படி செய்து, கை செய்து - ஒப்பனை செய்து, வளர்த்த போலும் - வளர்த்து
வைத்தாலொத்து, புரி மணி ஒண் குழல் திகழ - ஒளிர்கின்ற மணி மாலை சூட்டப்பட்ட
ஒள்ளிய கூந்தல் மிளிர, பொன்அணைமேல் - பொன்னாலாய ஆதனத்தின் மிசை,
இனிதிருந்த - இனிதாக வீற்றிருந்த, பொலிவு காண்மின் - அழகினைக் காணுங்கோள்,
(எ - று.)

     விமானத்தின் உள்ளே, நிழல் எறிப்ப இலங்கும், தெய்வப்பாவை போன்ற
கோப்பெருந்தேவி, மணியின் கதிர் குழற்றிக் கடைசுருட்டிக் கை செய்து வளர்த்தாற்
போன்ற, தன் குழல் திகழ, பொன்னணை மேலினிதிருந்த அழகினைக் காணுங்கோள்;
என்றார், என்க.
 

 (405)

 

அவள் விழியழகு

1536. மாநீல மிடைபதித்து வெண்பளிங்கிற்
     செவ்வரத்த விரேகை வாங்கிப்
பானீர வேல்வடிவு படத்திருத்தித்
     தாமரையுட் பாரித் தன்ன