பக்கம் : 956
 
 
  தூநீல வாணெடுங்கண் குழைமுகத்தி
     னுள்ளிலங்கத் தோன்று கின்ற
வாய்நீல மணியைம்பா லிவ்வணங்கு
     வரையணங்கோ வன்றோ காண்மின்.
 
     (இ - ள்.) வெண்பளிங்கில் - வெளிய பளிங்கினில், மாநீலம் இடைபதித்து - சிறந்த
நீலமணியை இடையிலே அழுத்தி, செவ்வரத்த இரேகை வாங்கி - செவ்வரக்குக்
குழம்பாலே சிறிய வரிகள் வரைந்து, பால் நீர வேல்வடிவு படத்திருத்தி - பாலினது
நீர்மையாகிய வெண்மை நிறமுடைய வேலினது உருவம் உண்டாகும்படி சீர்திருத்தி,
தாமரையுள் - செந்தாமரை மலர் அகத்தே, பாரித்தன்ன - வைத்தாற் போன்ற, தூநீலவாள்
நெடுங்கண் - தூய நீலநிறமுடைய ஒளியுடைய நீண்ட கண்கள்,

     குழை முகத்தின் உள் - தோடுகளையுடைய முகத்தின் அகத்தே, இலங்க - திகழா
நிற்ப, தோன்றுகின்ற - காணப்படுகின்ற, ஆய் நீலமணி ஐம்பால் - ஆராய்கின்ற நீலமணி
போன்ற அளகத்தை உடைய, இ அணங்கு - இத்தெய்வ மகள், வரை யணங்கோ -
மலையரமகளோ, அன்றோ - அல்லளோ, காண்மின் - காணுங்கோள், (எ - று.)

     வெளிய பளிங்கில், மரகதமணியை இடையே பதித்துச் செவ்வரக்குக் குழம்பாலே
வரியுண்டாக எழுதி, வெளிய வேல்வடிவுண்டாகத் திருத்திச் செந்தாமரை மலரகத்தே
வைத்தாற்போன்ற, நீல வாள் நெடுங்கண் முகத்திற்றிகழ, தோன்றாநின்ற கூந்தலையுடைய
இவள் வரையணங்கோ! அல்லளோ! காண்மின்! என்றார், என்க.

(406)

 
1537. எழுதாது மையொளிரு மிருமருங்கு
     மெறித்திடையே செங்கே ழோடித்
தொழுதாற்கு வரங்கொடுக்குந் தடங்கண்ணி
     துணைமுலையின் வளாகஞ் சூழ
விழுதாய குங்குமத்தா லிலதையையுங்
     கொழுந்தினையு மிழைத்தார் பின்னு
முழுதார முத்தணிந்தார் நுண்மருங்கு
     லுளதாக முயன்றா ரல்லர்.