பக்கம் : 96
 

     துருமகாந்தன் சென்று பொழிலைக் காக்கக்கடவன் என்று கட்டளையிட்டு; தேங்குழல்
இன்துணையவர்கள் தம் கோயில் எய்தினான் - தேன் பொருந்திய கூந்தலையுடைய இனிய
துணைவிமார்களின் இருப்பிடத்தை யடைந்தான்.
(எ - று.)

புட்பமாகரண்டம் என்னும் பொழிலில் துருமகாந்தன் என்பவனைக் காவல் வைத்தற்கு
முழுமனதுடன் இணங்கிய மன்னவன், அவ்வாறே செய்யுமாறு பணித்துவிட்டுத் தான்
அந்தப்புரத்தையடைந்தான்.
 

( 48 )

துருமகாந்தன் பொழிலையடைதல்

118. எரிபடு 1விரிசுட ரிலங்கு பூணினான்
திருவடி 2தொழுதுசெல் துரும காந்தனும்
வரிபடு மதுகர முரல வார்சினைச்
சொரிபடு மதுமலர்ச் சோலை நண்ணினான்.
 
     (இ - ள்.) எரிபடுவிரிசுடர் - நெருப்பைப்போல ஒளியை விடுகின்ற; இலங்கு
பூணினான் - விளங்குகின்ற அணிகலன்களையணிந்த பயாபதி மன்னனின்;
திருவடிதொழுதுசெல் - அழகிய அடிகளைப் பணிந்து செல்கின்ற; துருமகாந்தனும் -
துருமகாந்தன் என்பவனும்; வரிபடு மதுகரம் முரல - கோடுகள் பொருந்திய வண்டுகள்
ஒலிக்கும்படி; வார்சினை - நீண்ட கிளைகளிலே; சொரிபடு - சொரிகின்ற; மது - தேன்
பொருந்திய; மலர்ச்சோலை நண்ணினான் - மலர்கள் நிறைந்த புட்பமாகரண்டம் என்னும்
பொழிலை யடைந்தான். (எ - று.)

     அரசன் துருமகாந்தன் என்பவனுக்குக் கட்டளையிட்டுவிட்டு
அந்தப்புரத்தையடைந்தான். அரசன் கட்டளையைப் பெற்ற துருமகாந்தன் அரசனைத்
தொழுது காவலை மேற்கொண்டு பூம்பொழிலை யடைந்தான்.
 

 ( 49 )

குமாரகாலச் சருக்கம் முற்றிற்று

     (பாடம்) 1. விடுசுடர். 2. தொழுது போம்.