பக்கம் : 979
 

திவிட்டன் விதூடகனை அசதியாடல்

1571.  மாத வன்மொழிய மன்னவ னக்காங்
கேத மென்னைபெ ரிதெய்தினை 1யாங்கே
வேத நாவின்வி றல்வேதியர்க் கல்லால்
ஈத லில்லையினி யென்செய்தி யென்றான்.
 
     (இ - ள்.) மாதவன் மொழிய - பார்ப்பனன் இவ்வாறு கூற, மன்னவன் நக்கு -
அரசன் பெருகச் சிரித்து, ஆங்கு - அம்மண விழாவிடத்தே, பெரிது ஏதம் என்னை
எய்தினை - பெரிய துயரத்தை நீ எப்படி எய்தினாய், ஆங்கே - அம்மணவிழவிலே,
வேதநாவின் விறல் வேதியர்க்கு அல்லால் - வேதம் ஓதிய நாவாலே வெற்றி மிக்க
பார்ப்பனர்க்குக் கொழுக்கட்டைகள் கொடுப்பதல்லால், ஈதல் இல்லை - நின்போல்வார்க்குக்
கொடுத்தல் வழக்கில்லையே, இனி என்செய்தி - நீ இனி யாது செய்வாய், என்றான் -
என்று வினவினான், (எ - று.)

     இனித் தின்னலுறுவது முழுகும் என்று பார்ப்பனன் கூறியதற்கேற்பவே அங்கு
நின்போல்வார்க்குக் கொடார் எனவே நீ எவ்வாறு மோதகத்தால் துன்புற்றனை என,
இறந்தகாலத்தாற் கூறி அசதியாடினான் என்க.

(441)

 

விதூடகன் யான் வேதம் வல்லாரை வெல்வேன் எனல்

1572.  வேதம் வல்லவரை வென்றிடு கிற்கும்
வாதம் வல்லன தனாற்பெறு கிற்பன்
வாதம் வெல்லும் வகையும் 2மெனமாண்பு
3மாது பண்டு மறியும்மற வேலோய்.
 
     (இ - ள்.) மற வேலோய் - ஆண்மை மிக்க வேற்படை வேந்தே!, வேதம் வல்லவரை
- வேதம் கற்றுவல்லுநரான பார்ப்பனரை, வென்றிடுகிற்கும் - வெல்லுதற்குரிய,
வாதம்வல்லன் - வாதித்தற் றொழிலிலே யான் பெரிதும் வன்மையுடையேன், அதனாற்
பெறுகிற்பன் - அவ்வாற்றாலே அவரை வென்று யானே கொழுக்கட்டைகள் அனைத்தும்
பெறுவேன், மாது - கோப்பெருந்தேவியாரும், வாதம் வெல்லும் வகையும் - யான்
வாதத்திலே பிறரை வெல்லுகின்ற விதத்தையும் என மாண்பும் - என்னுடைய வேறு பிற
மாட்சிமைகளையும், பண்டும் அறியும்-முன்னரே நன்கு அறிந்துள்ளார், (எ-று.)

     வேதம் வல்ல வேதியரை வென்றொழிக்கும் வாதப் போரிலே யான் மிகவும்
வல்லனாதலின், அவ்வேதியரை வென்று, மோதகம் முழுதும் யானே தின்பேன்; என்
வாதப்போர் வன்மையையும், பிற மாண்புகளையும் தேவியார் முன்னரே அறிந்துள்ளார்
என்றான்; என்க.

 (443)


     (பாடம்) 1யென்றே. 2மென்மாண்பு. 3 மாதர்.