பக்கம் : 980
 

இதுவுமது

1573.  வாதம் வெல்லும் வகையா ததுவென்னில்
ஓதி 1வெல்ல லுறுவார்களை யென்கை
2கோது கொண்ட வடிவிற் றடியாலே
மோதி வெல்வ னுரைமுற் றுறவென்றான்.
 
     (இ - ள்.) வாதம் வெல்லும் வகை யாது என்னில் - நீ வாதத்திலே எவ்வாற்றால்
வெல்வாய் என்று வினவின், அது - அஃதாவது, ஓதி வெல்லல் உறுவார்களை -
வேதமொழிகளை விளம்பி என்னை வெல்லத் தொடங்கும் அப்பிராமணர்களை, என்கை -
யான் எனது கையிலே கொண்டுள்ள, கோதுகொண்ட வடிவிற் றடியாலே -
வளைவினையுடைய வடிவிற்றாய இந்தத் தடியாலே, உரைமுற்றுற - அவர்கள் மொழி
முடிந்து போகும்படி, மோதி - தாக்கி, வெல்வன் என்றான் - வென்று விடுவேன் என்று
கூறினான், (எ - று.)

     கோது - ஈண்டு வளைவு.

     வேதம் வல்வரை நீ எவ்வாறு வெல்வாய் என வினவுதியாயின் கூறுவல்,
வாய்மொழியாலே ஓதி ஓதி வெல்ல முற்படும், அவ் வேதியரை, யான் என் கையிலுள்ள
வளைதடியாலே நன்கு மோதி மோதி அவர் வாய்திறவாதவாறு செய்து வெல்வேன்
என்றான் என்க.

(443)

 

நம்பி விதூடகனோடு பூம்பொழில் புகல்

1574 நன்று 3வாதமிது காண்டு மெனப்போய்ச்
சென்று சோலைமதில் 4சேருபு வாயில்
ஒன்று 5காவலுழை யாரொடு கூடிப்
பொன்றி லாதபுக ழான்பொழில் புக்கான்.
 
     (இ - ள்.) நன்று - நல்லது, வாதம் இது காண்டும் என - இவ்வாதப் போரை யாமும்
காண்பாம் என்று, போய்ச் சென்று - நடந்து சென்று, சோலை - அப்பூம்பொழிலின், மதில்
சேருபு - மதிலை அடைந்து, வாயில் ஒன்று காவல் உழையாரொடு கூடி - அப்பொழிலின்
மதில் வாயிலிலே காவல் செய்கின்ற பணி மகளிரோடே கூடி, பொன்றிலாத புகழான் -
அழிவில்லாத புகழையுடைய திவிட்டநம்பி, பொழில்புக்கான் - அப்பொழிலினூடே
புகுந்தான், (எ - று.)
 

     (பாடம்) 1 வெல்லுறுவார்களை. 2 கோதில். 3வாதம் நனி காண்டும் மெனப்போய். 4
வாயிலதெய்தி. 5 காவினுழையாரொடுங் கூடி.