பக்கம் : 981
 

     அவ்வாறு வெல்வாய் எனின், அவ்வாதப்போர் காண்டற்கு இனிதே காண்! என
அசதியாடி, அவ் விதூடகனோடே சென்று, பொழில் காவல் மகளிருடன் வரப் புகழான்
பூம்பொழில் புக்கான் என்க.

(444)

விதூடகன் அப்பொழிலில் உதிரும் கனிகளைக் காண்டல்

1575. நீடு செம்பொன் முடியாற் 1கெதிர்நிந்தா
வேட மேவிய 2விதூடக னோடி
ஓடி யாடிவரு வானுயர் காவில்
கூடி வீழ்வன கொழுங்கனி கண்டான்.
 
     (இ - ள்.) நீடு செம்பொன் முடியாற்கு எதிர் - நீண்ட செவ்விய பொன்னாலியன்ற
முடியை உடைய திவிட்டனுக்கு முன்னர், நிந்தாவேடம் மேவிய விதூடகன் -
நகைத்தற்குரிய வேடம் புனைந்துள்ள அவ்விகடப் பார்ப்பனன், ஓடிஓடி ஆடி வருவான் -
அங்குமிங்கும் ஓடியும், ஆடியும் வருகின்றவன், உயர் காவில் - உயர்ந்த அப்பூம்
பொழிலிலே, கூடி வீழ்வன - சேர்ந்து வீழ்வனவாகிய, கொழுங்கனி கண்டான் - கொழுவிய
பழங்களைப் பார்த்தனன், (எ - று.)

     நம்பிக்கு முன்னர் அப்பொழிலிலே ஒடியாடி வருகின்ற விதூடகன் அப்பொழிலில்
வீழ்ந்து குவிந்து கிடக்கும் கொழுங் கனிகனைக் கண்டான் என்க. நிந்தா வேடம் -
ஒருவரைப் பழித்தற் பொருட்டுப் புனையும் வேடம் என்க.
 

(445)

 

விதூடகனின் பேராசை

1576. கண்டு கண்டுதன கண்கனி தம்மேல்
மண்டி 3மண்டிவர 4வாயெயி றூறக்
கொண்டு கொண்டுகுவி யாவிவை காணாய்
உண்டு முண்டுமென வோடி யுரைத்தான்.
 
     (இ - ள்.) கண்டு கண்டு - கனிகள் வீழுந்தோறும் பார்த்துப் பார்த்து, தன்கண் கனி
தம்மேல் மண்டிமண்டி வர - தன்னுடைய விழிகள் அக்கனிகள் மேலே பாய்ந்து பாய்ந்து
மீள்வனவாகவும், வாய் எயிறு ஊற - வாய் ஊறலெடுப்பவும், கொண்டுகொண்டு குவியா -
அக்கனிகளைப் பொறுக்கிக்கொண்டு வந்து கொண்டுவந்து ஓரிடத்துக் குவித்து, ஓடி -
அரசன்பாற் சென்று, இவை காணாய் - அரசே! இக்கனிகளைப் பார், உண்டும் உண்டும்
என உரைத்தான் - இவையிற்றை யாம் தின்னுவோம் தின்னுவோம் என அவாவுடன்
இயம்பினான், (எ - று.)
 

     (பாடம்) 1குடனாகி. 2விதூடகன் முன்னால். 3 மண்டிவர். 4 வாலெயி.