பக்கம் : 993
 

     அவ்வாறு ஓடுகின்ற விதூடகனை, நம்பி ஏடா! பார்ப்பன மகனே! இங்கு நீ
அஞ்சுதற்கு யாது கண்டனை என, அரசே! இதனுள் ஒரு பூதம் உளது; அது நம்மை
அடித்துத் தின்றுவிடும்; ஆதலால், விரைந்துயாம் போய்விடவேண்டும்; வருதி! வருதி!
என்று புலம்பியுரைத்தான் என்க.

(467)

 

நம்பி அப்பூதம் எத்தகைய தெனலும்,
அதற்கு விதூடகன் விடையும்

1598. யாதத னுருவென 1வெரிபொன் னோலையும்
சோதிசூழ் சுடர்மணிக் குழையுந் துன்னிய
காதொடு கண்பிறழ்ந் துளது கைகுறி
தூதிய வயிற்றதென் றுருவ மோதினான்.
 
     (இ - ள்.) யாது அதன் உரு என - ஆயின் அப்பூதத்தின் உருவம் எத்தகையது
என்று திவிட்டன் வினவ, பொன்னோலையும் - பொன்னோலை யையும், சோதிசூழ்
சுடர்மணிக்குழையும் துன்னிய காதொடு - ஒளிபடர்ந்து சுடர்கின்ற குண்டலங்களையும்
பொருந்திய காதுகளோடே, கண் பிறழ்ந்து உளது - கண்கள் மருண்டு பிறழ்ந்தனவாக
உளது, கைகுறிது - குறுகிய கைகளை உடையது, ஊதிய வயிற்றது - பருத்த வயிற்றை
உடையது, என்று - என்றிவ்வாறு, உருவம் ஓதினான் - தான்கண்ட பூதத்தின் உருவத்தை
எடுத்துக் கூறினான், (எ - று.)

     நம்பி நீ கண்டபூதம் எத்தகையது என்று வினவ, பொன்னோலை யையும்
குண்டலங்களையும் உடையதாய், கண்கள் பிறழ்ந்து, குறிய கையும், ஊதிய வயிறும்
உடையது அப்பூதம் என்றான் என்க.

(468)

 
நம்பி அது பூதமன்று நின்னிழல்காண் எனல
1599. மின்னிழற் பூணவன் மெல்ல நக் கது
நின்னிழற் 2காணென நிற்க நின்னுரை
என்னிழ லென்னொடு மியங்கி னல்லது
கன்னிழ லுட்புகிற் காண்ட லாகுமே.
 
     (இ - ள்.) மின்னிழல் பூணவன் மெல்ல நக்கு - மின்னொளி மிக்க
அணிகலன்களையுடைய திவிட்டன் புன்முறுவல் கொண்டு, அது - அவ்வுருவம்,
நின்நிழல்காண் என - உன்னுடைய நிழலேயாம் பிறிதன்றுகாண் என்று கூற, நின்னுரை
நிற்க - அரசே உன்னுடைய மொழி அமைக, என்நிழல் என்னொடும் இயங்கின் அல்லது -
என்னுடைய நிழல் என்னொடு கூட இயங்குமேயன்றி, கல்உள் நிழல் புகில் காண்டல்
ஆகுமே - இக்கல்லினுள் அந்நிழல் புகுமாயின் அதனை நாம் எவ்வாறு காணுதல் கூடும்?
(எ - று.)

     (பாடம்) 1 வலர் பொன். 2காணது.