பக்கம் : 995
 

     (இ - ள்.) திருந்திய மணி நகைத் தேவி - நிரல் படத்திருத்தப்பட்ட நித்திலக்
கோவை போன்ற பற்களையுடைய சுயம்பிரபை, இவ்வழி - இவ்விடத்திற்கு, வருந்துணைப்
பொழுதும் - வருமளவும், இம் மணிச் சிலாதலம் பொருந்தின - இம் மணிமேடையமைந்த,
பொழில்நலம் - பூம்பொழிலின் அழகினை, காண்டும் என்று - யாம் காண்பாம் என்று கருதி,
இருந்தனர் இருவரும் இனிதின் என்பவே - திவிட்டனும் விதூடகனும் இனிதாகத்
தங்குவாராயினர் என்று அறிஞர் கூறுவர். அரோ: அசை, (எ - று.)

     கோப்பெருந்தேவி இவ்விடத்திற்கு வருந்துணையும், யாம் இப்பொழிலின் அழகினை
நுகர்ந்து மகிழ்வேம், என நம்பியும் வேதியனும் இனிதாக இருந்தனர் என்க.

(471)

 

கோப்பெருந்தேவி யப்பூம்பொழி லடைதல்

வேறு

1602. மின்னவிர் விளங்குமணி மேகலை நிழற்றப்
பொன்னவிர் சிலம்பொலி 1பெயர்ந்துபுடை சாற்றக்
கன்னியர் நிரந்துபலர் காவலொடு சூழ
அன்னமென வந்தரசி யார்பொழி 2லடைந்தாள்.
 
     (இ - ள்.) மின் அவிர் விளங்கும் மணிமேகலை நிழற்ற - மின்னல் விரிந்து
திகழ்கின்ற மணிமேகலை அணி ஒளிபரப்பவும், பொன் அவிர் சிலம்பு ஒலி பெயர்ந்து புடை
சாற்ற - அழகு திகழ்கின்ற சிலம்பணி ஒலித்துப் பக்கத்தே ஆரவாரிப்பவும், கன்னியர் பலர்
நிரந்து காவலொடு சூழ - உழைக்கல மகளிர் பலர் நெருங்கிப் புறங்காப்பாராய்த் தன்னைச்
சூழ்ந்து வரவும், அரசி - கோப்பெருந்தேவியாகிய சுயம்பிரபை, அன்னம் என வந்து -
அன்னப் புட்போன்று நடந்து வந்து, ஆர்பொழில் அடைந்தாள் - பொருந்திய
அப்பொழிலை எய்தினாள், (எ - று.)

     அவ்வமயத்தே, கோப்பெருந்தேவி நிழற்றவும், புடைசாற்றவும், சூழவும், அன்னமென
வந்து, அப்பொழிலை அடைந்தாள் என்க.

 (472)

 
சுயம்பிரபை வித்தையால் தன்னுருக்கரந்து நிற்றல்
1603. மாலையமர் சிந்தையொடு வார்பொழின் மருங்கின்
வேலையமர் கண்ணிவிளை யாடுதல் விரும்பி
3மேலையமர் விஞ்சையின் மறைந்துவிரை நாறும்
சோலையமர் தோகையென வேதொழுது நின்றாள்.
 
 

     (பாடம்) 1 போந்துபுடை. 2 அடைந்தார்.3வேலையவர்.