பக்கம் : 996
 

     (இ - ள்.) மாலை அமர் சிந்தையொடு - திருமாலாகிய திவிட்ட நம்பியைப் பெரிதும்
விழைந்த உள்ளத்தோடே, வார்பொழில் மருங்கின் - நீண்ட அப்பூம்பொழி லிடத்தே,
வேலை அமர்கண்ணி - வேல்போன்ற கண்களையுடைய அச்சுயம்பிரபை, விளையாடுதல்
விரும்பி - ஒரு விளையாட்டைச் செய்ய எண்ணி, மேலை அமர் விஞ்சையின் மறைந்து -
தான் முன்னர் விரும்பிப் பயின்றதொரு வித்தையாலே தன் உருக்கரந்து, விரை நாறும்
சோலை அமர் தோகை எனவே - மணங்கமழும் பூம் பொழிலிலே உரையுமொரு மயில்
போன்று, தொழுது நின்றாள் - திவிட்டனை வணங்கி ஒரு சார் அவனறியாதே
நிற்பாளாயினள், (எ - று.)

     திவிட்டன் தன்னைக் காணானாகவும், அவனைத் தொழுது நிற்றல் அவளது
கற்புடைமையின் பெருமையை விளக்கும்.

     “தெய்வம் தொழாஅள் கணவற் றொழுதெழுவாள்“ என்புழியும் கணவன் உறங்கும்
பொழுதும் அவனைத் தொழுதல் என்றமை காண்க.

     மாலை - திருமாலாகிய திவிட்டனை. மாலை - மால் எனினுமாம். ஐகாரம் சாரியை
என்க. வேலை - கடலுமாம். அமர் சிந்தை : வினைத் தொகை. அவ்விடத்தே வந்த தேவி
திவிட்டனை அசதியாடல் கருதி வித்தையாலே உருக் கரந்து கைதொழுது நின்றாள் என்க.

(473)

 

திவிட்டன் சிலாதலத்தின்மிசைப் பூவணையிற் றிகழ்தல்

1604. மாதவன் மருட்டமழை வண்ணன்மணி வட்டம்
சோதிவிடு சூழ்சுடர் 1வளாவவதன் மேலா
தாதுபடு போதுதவி சாமென 2வடுத்த
மீதுபடு பொங்கணையின் மெல்லென விருந்தான்.
 
     (இ - ள்.) மாதவன் மருட்ட - விதூடகன் தனது சொல்லாலும் செயலாலும் தன்னை
வியப்பூட்ட, மழைவண்ணன் - முகில் வண்ணமுடைய திவிட்டன். மணிவட்டம் - அந்த
மணிகள் அழுத்திய அப்பளிக்கு மேடை, சோதிவிடு சூழ்சுடர் வளாவ - தனது ஒளி
வீசுகின்ற கதிர்கள் தன்னைச் சூழ்ந்து வளைய, அதன் மேல்ஆல் - அச்சிலைவட்டத்தின்
மேலே, தாதுபடுபோது - பூந்துகளையுடைய மலர்களை, தவிசாம் என அடுத்த -
அணைபோலே புனைந்து வைக்கப்பட்டமையாலே, மீது படு பொங்கு அணையின் -
அச்சிலாவட்டத்தின் மேலுண்டான பெரிய அணையின் மேலே, மெல்லென இருந்தான் -
இனிதாக வைகினான், (எ - று.)
 

     (பாடம்) 1வளர்வவதன். 2விடுத்த.