பக்கம் : 998 | | (இ - ள்.) உலத்தகைய தோள் அணிகொள் மார்ப - திரள் கல்லை ஒத்த தோள்களையும் அணிகலன் பூண்ட மார்பினையும் உடையோனே, அசோகின் மிசை - இவ்வசோக மரத்தின் மேலே, அலத்தக அடிச்சுவடு வைத்தாள் - தனது செம்பஞ்சுக் குழம்பூட்டப் பெற்ற அழகிய அடிச்சுவட்டைப் பொறித்தவள், நிலத்தவள் கொல் - இம்மண்ணுலக மடந்தையோ, அன்றி நெடுமால் வரையுளாள் கொல் - அல்லளேல் நீண்ட பெரிய மலையகத்தே வதியும் அரமகளோ, உரையென - நீ ஆராய்ந்து கூறுக என்று வினாவ, வலத்தகையன் ஆய மணி வண்ணன் மொழிகின்றான் - வன்மைத் தகுதியிற் பெரியோன் ஆகிய திவிட்டன் கூறுகின்றான், (எ - று.) மார்ப! இவ்வசோகின் மிசைச் செம்பஞ்சுக்குழம்பின் பொறியுண்டாக அடியிட்டாள், மண்ணுலகமடந்தையோ? வரையரமகளோ? உரை என்றான், என்ன மணிவண்ணன் மொழிகின்றான் என்க. | (476) | | அவ்வடிச்சுவடு சுயம்பிரபையினது என்றெண்ணி, அஃது ஒரு விச்சாதரியின் சுவடு எனல் | 1607. | செய்யன செறிந்தன திரண்டவிரல் சால 1ஐயதசை யார்ந்தவடி 2யின்னழகி னாலே மெய்யுமறி வன்வினவில் விஞ்சையன்ம டந்தை வையமுடை யாற்குரிய மாதரவ 3ளென்றான். | (இ - ள்.) வினவில் - பார்ப்பனனே நீ அவ்வாறு வினவுதியாயில் (கூறுவேன்), சால ஐய தசையார்ந்த அடியின் - மிகவும் மெல்லிய தசை பொருந்திய இக்காலினது, விரல் - விரல்கள், செய்யன - செவ்வியன, செறிந்தன - ஒன்றோடொன்று அழகுபட நெருங்கியுள்ளன, திரண்ட - உருட்சியாய்த் திரண்டும் உள்ளன, அழகினாலே - இச்சுவட்டைச் செய்த அடியின் அழகைக்கொண்டு கருதுமிடத்து, விஞ்சையன் மடந்தை - இச் சுவட்டைச் செய்தவள் ஒரு விச்சாதரன் மகளே ஆவள், மெய்யும் அறிவன் - அவள் யார் என்னும் உண்மையும் யான் அறிந்துள்ளேன், வையம் உடையாற்கு உரிய மாதர் அவள் என்றான் - இவ்வுலகத்தை உடைய மன்னன் ஒருத்தனுக்கு உரியவளும் ஆவாள் அவ்விஞ்சையள் என்றும் கூறினான், (எ - று.) அவ்வடிச்சுவட்டின் பேரழகாலே அது சுயம்பிரபையின் அடிச்சுவடு என ஊகித்தறிந்த திவிட்டநம்பி அதனை வெளிப்படையாய்க் கூறாது குறிப்பாகக் கூறுகின்றான் என்க. ஐய - அழகுடைய, அடியின் அழகாலே ஆராயுமிடத்தே, இவ்வடியிட்டாள் ஒரு விச்சாதரமகளே! அவளும் ஒரு மன்னனுக்குக் காதலுரிமை பூண்டவள் ஆவாள் என்பதும், யான் அறிகுவல் என்று நம்பி கூறினான் என்க. | (477) |
| (பாடம்) 1 ஐயதிசை. 2 வின்னழகி. 3 ள்கண்டாய். | | |
|
|