இசைப் புலவர்கள் வாழ்த்துக் கூறுதல்

100 .பண்ணமை மகர நல்யாழ்ப் பனுவனூற் 1புலவர் பாடி
2மண்ணமர் வளாக மெல்லாம் 3மலர்ந்தநின் புகழோ டொன்றி
விண்ணகம் விளங்கு திங்கள் வெண்குடை நிழலின் வைகிக்
கண்ணம ருலகம் காக்கும் கழலடி வாழ்க வென்றார்.
 

     (இ - ள்.) பண் அமை - எழுவகை இசைகளும் அமைந்த; நல்மகரம் யாழ் - நல்ல
மகர வீணையைத் தாங்கிய; பனுவல் நூல்புலவர் பாடி - சிறந்த நூல்களை யுணர்ந்த
புலவர்கள் பலவகைப் புகழ்ப்பாக்களைப் பாடி; விண் அகம் விளங்கு திங்கள் வெண்குடை
நிழலின் வைகி - விண்ணின் கண்ணே விளங்குகின்ற திங்கள் மண்டலத்தைப்போன்ற
ஒப்பற்ற வெண்கொற்றக் குடையின் நீழலிலே தங்கி; கண்அமர் உலகம் காக்கும் -
இடமகன்ற உலகத்திலுள்ள உயிர்த்தொகைகளைப் பாதுகாக்கும்; நின் - உன்னுடைய;
கழல்அடி - மறக்கழலையணிந்த அடிகள்; மண் அமர் வளாகம் எல்லாம் மலர்ந்த -
மண் பொருந்திய வளைந்த உலகத்திலெல்லாம் பரவிய; புகழோடு ஒன்றி வாழ்க என்றார் -
புகழோடு பொருந்தி வாழ்க என்று வாழ்த்துக் கூறினார்கள். (எ - று.)

     இச்செய்யுளிற் கூறப்பெறும் யாழ்ப்பனுவல் நூற்புலவர், எப்போதும் அரசன்
மாட்டிருந்து அவன் புகழை யாழிலமைத்து இன்னிசையுடன் பாடும் இசைவாணர் என்க.
பண் - நிறைந்த நரம்புகளையுடைய இராகம். பேரியாழ், மகரயாழ், சகோடயாழ்,
செங்கோட்டியாழ் என யாழ் நான்கு வகைப்படும். மகரயாழ் என்பது மகரமீனின் அங்காந்த
வாய்போல வளைந்த நுனி அமைக்கப்படுதலால் மகரயாழ் என்று பெயர்பெற்ற தென்பர்.
யாழ்ப்புலவர் - வீணைப் பாடகர். வளாகம் - நீர்சூழ்ந்த இடம்.

(31)