(இ - ள்.) மற்றவர் காணும்போழ்தின் - அம்மகளிர்கள் அவ்வண்ணம் சுயம்பிரபையைப் பார்க்கும் அமயத்தில், சுற்றிய சோதி பளிங்குச் சுவர்மிசை - சூழ்ந்துள்ள ஒளிமிக்க பளிங்குச் சுவரின்மேல், அன்னாள் தோன்ற - அச்சுயம்பிரபையின் உருவம் தோன்றிற்றாக, மாதவசேனை என்பாள் - மாதவசேனை என்னும் அத்தவமகள் அந்நிழலுருவைப் பார்த்து, இற்று இவள் உருவம் என்றாங்கு - இத்தன்மைத்து இவளுடைய உருவத்தின் அழகு என்று ஊன்றி எண்ணி, அவ்விடத்தே, இதயத்துள் எழுதிவைத்து - தன் உள்ளமாகிய கிழியிலே அவள் உருவமாகிய ஓவியத்தைத் தீட்டிவைத்து, பிற்றை ஓர் பலகை தன் மேல் - பின்னர் ஒரு பலகையின்மேல், பெய்வளை எழுதலுற்றாள் - அம்மாதவ சேனை, சுயம்பிரபையின் உருவ ஓவியத்தைப் பொறிக்கத் தொடங்கினாள், (எ - று.) பெய்வளை - மாதவசேனை, மகளிர்கள் நங்கையை இவ்வாறு காணும் பொழுது மாதவசேனை, சுயம்பிரபையின் சோதியால் அவளை நேரிற் காணமாட்டாதவளாய், அயலிலுள்ள பளிங்குச் சுவரில் அவள் உருவம் சிறிது ஒளிகுன்றித் தோன்றலைக் கண்டவள், அவ்வுருவினை முன்னர்த் தன் உள்ளக்கிழியில் எழுதிக்கொண்டு, பின்னர்ப் பலகையிலே எழுதத் தொடங்கினாள், என்க. |