மாதவ சேனை சுயம்பிரபையை வினாதல்

1003.

ஆதலா லவர்க்குச் சொல்லு மாற்றமொன் றருளிச் செய்மின்
மாதுலாஞ் 1சாயலென்ன மாதவ சேனை யென்பாள்
ஏதமாங் கில்லை யன்றே யெங்கண்முன் மொழிய 2வென்றாள்
கோதிலாக் குணக்கொம் பன்னாள் குறுநகை முறுவல்
கொண்டாள்.

     (இ - ள்.) ஆதலால் - அவ்வாறு இருத்தலால், மாது உலாம் சாயல் - அழகு
உலவுகின்ற இனிய தோற்றமுடைய சுயம்பிரபையீர்!, அவர்க்குச் சொல்லும் - நுமது
மாமியாரடிகட்கு யாம் சென்று இயம்பும், மாற்றம் ஒன்று அருளிச்செய் மின் என்ன - ஒரு
வார்த்தை எமக்குக் கூறியருளுங்கோள்.என்று முன்னர்க் கூறிப் பின்னர், எங்கள் முன் மொழிய - உம் மாமியாரடிகட்கு நீவிர் கூறும் வார்த்தையை எங்கள்பால் இயம்புவதனால், ஆங்கு ஏதும் இல்லையன்றே -அவ்விடத்தே உண்டாகுமொரு குற்றமும் இல்லை அல்லவா, என்றாள் மாதவ சேனை என்பாள் - என்று மாதவசேனை என்பவள் கூறினாள், கோதிலாக்குணக் கொம்பன்னாள் -அழுக்கற்ற குணமுடைய பூஞ்கொம்பை யொத்த சுயம்பிரபையும் அது கேட்டு, குறுநகை முறுவல் கொண்டாள் - நுண்ணிதிற் புன்முறுவல் பூத்தாள், (எ - று.)
ஆதலால், நும்மாமியாரடிகள் பால் நும்மொழியாக யாங்கள் கூற ஏதேனும் எம்பாற்
கூறியருள்க; அவ்வாறு கூறுதலால் ஏதமிலதன்றே என்று மாதவ சேனை கூறினாள்;
அதுகேட்டு நங்கை புன்முறுவல் பூத்தாள் என்க.

( 177 )