மாதவசேனை, அவ் வோவியத்துடன்
திவிட்டன்பாற் சேறல்.
1014.

மற்றவ டொழுது போகி மணிவண்ணன் மகிழ்ந்த கோயிற்
1சுற்றிநின் றெரியுஞ் செம்பொற் சுடர்மணி வாயி னண்ணி
இற்றென விசைத்துப் புக்காங் கிளையவன் கழல்கை கூப்ப
வெற்றுநீ வந்த தென்றாற் கிதுவெனா வெடுத்துச் சொன்னாள்.

     (இ - ள்.) மற்றவள் தொழுது போகி - அம்மாதவசேனை என்பாள் சசிதேவியை
வணங்கி அவணின்றும் சென்று, சுற்றி நின்று எரியும் செம்பொன் சுடர்மணி - தன்னைச்
சூழ்ந்து ஒளிக்கற்றைகள் பொருந்தி விளங்கும் செவ்விய பொன்னாலியன்ற ஒளிரும் மணிகள்
பொருந்தியதும், மணிவண்ணன் மகிழ்ந்த - திவிட்டனால் விரும்பி உறையப்பட்டதும் ஆகிய,
கோயில் வாயில் நண்ணி - அரண்மனை வாயிலை அடைந்து, இற்றென இசைத்துப்புக்கு -
தான் வந்த காரியம் இத்தன்மைத்தென்று வாயில் காவலருக்குக் கூறி அரண்மனையின்
உள்ளே சென்று, ஆங்கு இளையவன் கழல் கைகூப்ப - அவ்விடத்தே திவிட்டநம்பியைக்
கண்டு அவன் அடிகளை வணங்கினாளாக, எற்று நீ வந்ததென்றாற்கு - மாதவசேனையே நீ
வந்த காரியம் யாதென வினவிய திவிட்டநம்பிக்கு, இது எனா எடுத்துச் சொன்னாள் -
மாதவசேனையான் வந்த காரியம் இஃதென்று எடுத்துக்கூறத் தொடங்கினாள், (எ - று.)

மாதவசேனை, தொழுது, போகி, வாயில் நண்ணி, இசைத்துப்புக்கு, கைகூப்ப, ஏற்று
நீவந்தது? என்ன, இற்றெனச் சொன்னாள், என்க.

( 188 )