திவிட்டன் அவ் வோவியங் கண்டு வியப்புறுதல்

1016.

அப்படித் தாயிற் காண்பா மென்றன னரச நம்பி
மைப்புடை நெடுங்க ணாளு மருங்குநின் றவரை நீக்கிக்
கைப்புடைப் பலகை மேலாற் கன்னிய துருவங் காட்ட
மெய்ப்புடை தெரிய மாட்டான் விருந்துகொண் மனத்த னானான்.

       (இ - ள்.) அரச நம்பி - திவிட்டன், அப்படித்தாயிற் காண்பாம் என்றனன் -
அத்தகைய அருங்கலம் உளதாயில் அதனை யான் பார்ப்பேன் என்று கூறினானாக,
மைப்புடை நெடுங்கணாளும் - மையூட்டப்பட்ட பக்கங்களையுடைய நீண்ட கண்களையுடைய
மாதவசேனையும் உடனே, மருங்கு நின்றவரை நீக்கி - பக்கத்தே நின்றவர்களை அகலப்
போமாறு செய்து, கைப்புடைப் பலகை மேலாற் கன்னியது உருவம் காட்ட - தன் கையகத்
ததாகிய பளிக்குப் பலகைமேல் வரையப்பட்ட சுயம்பிரபையின் ஓவிய உருவத்தைத்
திவிட்டனுக்குக் காட்டாநிற்ப, மெய்ப்புடை தெரிய மாட்டான் - இது சுயம்பிரபையின்
உருவம் என்னும் மெய்ப் பகுதியை அறியமாட்டாதவனாய், விருந்துகொள் மனத்தன்
ஆனான் - மருட்கை யென்னும் மெய்ப்பாடு கொண்ட மனத்தையுடையவன் ஆனான்,
(எ -று.)

புதுமை பெருமை சிறுமை ஆக்கம் என்னும் நான்கும் நிலைக்களனாகத் தோன்றும்
மருட்கையாகலின் ஈண்டுப் புதுமைபற்றிப் பிறந்த மருட்கையை, விருந்தென்று கூறினார்.

( 190 )