(இ - ள்.) கன்னியது உருவம் காளை காண்டலும் - சுயம்பிரபையின் திருவுருவத்தைத் திவிட்டன் இவ்வாறு கண்டவுடனே, கேடு இல் காமன் - தன் தொழிலிற் கெடுதலில்லாது வெற்றியே கொள்ளும் காமவேள் என்பான், பொன்னியல் கழலன் - பொன்னாலியன்ற வீரக்கழல்களைக் கட்டியவனாய், தாரன் - மாலையை அணிந்தவனாய், பூட்டிய சிலையன் ஆகி - நாண் ஏற்றிய வில்லையுடையவனாய்ப் போர்க்கோலம் பூண்டு, கை மன்னிய வில் நோக்கி - தன் கையின்கட் பொருந்திய கரும்பு வில்லையும் நன்கு பார்த்து, அணிமலர்க்கணையும் நோக்கி - அழகிய மலரம்புகளையும் நன்கு பார்த்து, துன்னிய பொழுதும் நோக்கி - தன் செயலுக்கு ஏற்றதாய்ப் பொருந்தியுள்ள காலத்தையும் நன்கு பார்த்து, சுடுசரம் தொடுக்கலுற்றான் - (சீர்த்தவிடமாதல் கண்டு கொக்கின் குத்தொக்க விரைந்து) சுடுகின்ற அம்புகளை வில்லிற் றொடுத்து ஏவினான், (எ - று.) |