இதுவுமது

1021.

மாகத்து மதிய மன்ன வாணுதன் மடந்தை தன்னை
யாகத்து ளடக்கி 3மன்னு மணிநுத லழகு நோக்கி
நாகத்தை நடுக்கு மல்கு னங்கைதன் றிறத்துக் காம
வேகத்தை மெல்ல மெல்ல வில்வலான் பெருக்கி யிட்டான்.

      (இ - ள்.) மாகத்து மதியம் அன்ன - விசும்பின் கண்ணதாகிய பிறையை ஒத்த, வாள்
நுதல்மடந்தை தன்னை - ஒளி பொருந்திய நெற்றியையுடைய சுயம்பிரபையின் ஓவியத்தை,
ஆகத்துள் அடக்கி - தன் மார்பினுள் பொருந்த வைத்து, மன்னும் மணி நுதல்
அழகுநோக்கி - நிலைபெற்ற மணியாலியன்ற சுட்டியினையுடைய நுதலின் அழகைக் கூர்ந்து
பார்த்து, நாகத்தை நடுக்கும் அல்குல் - பாம்பின் படத்தை ஒத்த அல்குலையுடைய,
நங்கைதன் திறத்து - சுயம்பிரபை பொருளாக எழுந்த, காம வேகத்தை - காமநோயின்
கொடுமையை, வில்வலான் மெல்ல மெல்ல பெருக்கியிட்டான் - வில் வித்தையில் வல்லுநன்
ஆகிய திவிட்டன் படிப்படியாய் மிகும்படி செய்து கொண்டான், (எ - று.)

வில்வலான் - காமவேள் எனக்கொள்ளின், நோக்கி என்னும் எச்சத்தை நோக்க எனத்
திரித்துக்கொள்க. சுயம்பிரபையின் ஓவியத்தைத் தன் மார்போடே சேர்த்து, நுதலின்
அழகுநோக்கி நங்கை திறத்துத் தன்பால் எழுந்த காமவேகத்தை மிகுவித்தான் என்க.

(195)