(இ - ள்.) மீது உலாம் திகிரி வெய்யோன் மறைதலும் - விசும்பில் இயங்குதலுடைய ஒற்றையுருள் உடைய கதிரவன் மறைந்தவுடனே. பொய்கைத் தாமரை - குளங்களிலுள்ள தாமரை மலர்கள், காதலார் அகன்ற போழ்தில் - தம் காதற் கிழவர் தம்மைவிட்டுப் பிரிந்த காலத்தே, கற்புடை மகளிர்போல - பிரிவாற்றாமல் அழகழிந்து தோன்றும் திண்ணிய கற்புடைய குலமகளிர்களைப் போன்று, போதெல்லாம் குவிந்த - மலர்களெல்லாம் இதழ்கள் கூம்பினவாய், பொலிவு நீங்க - அழகினை இழந்தனவாக, சிறு வெள்ளாம்பல் - சிறிய வெள்ளிய ஆம்பல் மலர்கள், தாதெலாம் அலர நக்கு - பூந்துகள் விரியும்படி நகைத்து, தம்மையே மிகுத்த அன்றே - தம்மைத் தாமே மிகைபடக் காட்டின. அன்றே : அசை, (எ -று,) “அகப்பட்டி யாவாரைக் காணி னவரின் மிகப்பட்டுச் செம்மாக்குங் கீழ்Ó என்னும் குறளை ஈண்டு ஒப்பு நோக்குக. தம்மைமிகுத்தல் - செம்மாத்தல். அயலார் இடுக்கண் கண்டுவத்தல் கீழ்கள் இயல்பாகலின் சிறு வெள்ளாம்பல் என்றார், நகைத்தல் - ஈண்டு மலர்தல். |