நிமித்திகன் தன் ஆற்றலைக் காட்டத் தொடங்குதல்

105.

உற்றத னொழுக்கிற் கேற்ப வுலகுப சார நீக்கிக்
கொற்றவன் குறிப்பு நோக்கி யிருந்தபின் குணக்குன் றொப்பான்
முற்றிய வுலகின் மூன்று காலமு முழுது நோக்கிக்
கற்றநூற் புலமை தன்னைக் காட்டுதல் கருதிச் சொன்னான்.
 

     (இ - ள்.) குணம் குன்று ஒப்பான் - நல்லியல்புகளில் மலையை ஒப்பவனாகிய
அந்நிமித்திகன்; உற்ற - பொருந்திய; தன் ஒழுக்கிற்கு ஏற்ப - தன்னுடைய
நல்லொழுக்கத்திற்குத் தக்கபடி; உலகு உபசாரம் நீக்கி - உலக நடைக்கேற்பச் செய்யும்
வழிபாடுகளை விலக்கி; கொற்றவன் குறிப்பு நோக்கி - அரசனது குறிப்பைப் பார்த்து;
இருந்தபின் - அரசன்காட்டிய இருக்கையில் அமர்ந்தபின்; முற்றிய உலகில் - நிரம்பிய
உலகத்தில்; மூன்று காலமும் முழுதும் நோக்கி - இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம்
என்னும் மூன்று காலத்துச் செய்திகளையும் நன்றாகப் பார்த்து; கற்றநூல் புலமை தன்னை -
தான் கற்றுள்ள சோதிட நூலுணர்ச்சித் திறத்தை; காட்டுதல் கருதிச் சொன்னான் -
எல்லோருக்கும் நன்கு புலப்படுத்த நினைத்துச் சில மொழிகளைக் கூறலானான். (எ - று.)

     ஒழுக்கத்தாலுயர்ந்தோர் தமக்குப் பிறர் செய்யும் உபசாரங்களை மறுப்பது இயல்பென்க. குணக்குன்று - நற்குண மலை. மலைக்கு நற் குணங்களாவன; “அளக்கலாகா வளவும் பொருளும், துளக்க லாகா நிலையுந் தோற்றமும், வறப்பினும்வளந்தரும் வண்மையும் மலைக்கே“ என்பவைகளாம். மூன்றுகாலம் : இறப்பு எதிர்வு நிகழ்வு என்பன.

( 36 )