(இ - ள்.) காமனும் கணைப்பயன்கொண்டு - காமவேளும் தான் ஏவுகின்ற மலர்வாளியானாய பயனை எய்தவும், நாமும் நல்நல்வினை கண்களால் நுகரும் - தோழியீர் யாம் செய்த மிக்க நல்லறங்களின் பயனை நம் கண்களாலே நுகர்தற்கும் உரித்தாயுள, நாள்அவாய் - அந்நாளை யாம் விரும்பி, வாமன்றன் நகருழைப் போய் - அருகபரமனாருடைய திருக்கோயிலினுட் சென்று, யாமம் இங்கு ஒருங்குடன் அகல என்று - ஒன்றன்பின் ஒன்றாய் மெல்லக் கழியும் இயல்புடைய இவ்விரவின்கண் உள்ள யாமம் அனைத்தும் ஒன்றுபட்டு விரைந்து ஒன்றாய்க் கழிவதாக அருள்செய்ய வேண்டும் என்று, வரங்கொள்வாம் கொல் - வரம்தரவேண்டிக்கொள்வோம் என்று ஒருத்தி கூறினாள். கொல் ஓ இரண்டும் அசைகள், (எ - று.) மன்மதன் தன் தொழிலில் வெற்றிகோடல் இருவரும் கூடுதலே யாதலின், காமனும் கணைப்பயன் கொள்ள என்றாள். கணைப்பயன் - வெற்றி. யாமம் ஒருங்குடன் கழிய என்றது - ஒன்றன்பின் ஒன்றாய்க் கழியாதே ஒருசேரக் கழிய என்றபடி. இறைவன் எல்லாம் வல்லனாகலின் - இவ்வாறு செய்வன் என்றாள், எனவே திங்களாரை வேண்டுவம், என்றாளை மறுத்தவாறாயிற்று. |