1055.

இன்னன நகைமொழி யின்பக் கோட்டியோ
டன்னமென் னடையவ ளமர வாயிடை
மன்னவற் 1கேழிசைத் தெழுந்த தூரியங்
கன்னியுங் கடிகம ழமளி யேறினாள்.

     (இ - ள்.) இன்னன - இவை போல்வன, நகைமொழி - நகைச்சுவை பொருந்திய
மொழிகளை இயம்பும், இன்பக் கோட்டியோடு - இன்பத்திற்குக் காரணமான தோழியர்
குழாத்துடனே, அன்னம் மெல்நடையவள் அமர - அன்னம்போலும் மெல்லிய
நடையினையுடைய சுயம்பிரபை உறையாநிற்ப, ஆயிடை - அப்பொழுது, மன்னவற்கு -
திவிட்ட நம்பிக்கு, தூரியம் - மங்கலப்பறைகள், ஏழிசைத்து - இரவின் நாழிகை
ஏழாதலையுணர்த்தும் பொருட்டு, எழுந்த - முழங்கின, கன்னியும் - சுயம்பிரபையும், கடிகமழ்
அமளி ஏறினாள் - மணங்கமழ் தரும் மலரணையின் கண்ணே ஏறுவாளாயினள், (எ - று.)

திவிட்டனுக்குப் படுக்கைக்குச் செல்லுதற்குரிய ஏழாம் நாழிகையை உணர்த்தும் மங்கலப்பறை
முழங்கின. அதுகேட்ட சுயம்பிரபையும் அமளியில் ஏறினாள் என்க. இரவின் ஏழாம்நாழிகை
படுக்கைக்குப் போகும்நேரம் என்பதும் அதனை அறிவிக்க மங்கலப்பறை முழக்கப்படும்
என்பதும் இதனால் உணரப்படும். தூரியம் - ஈண்டு மங்கலப்பறை.

( 229 )