இருள் மிகுதல்

1057.

நல்வினை கழிதலு நலியுந் தீவினை
செல்வதே போலிருள் செறிந்து சூழ்ந்தது
பல்வினை மடிந்தன படர்ந்த தாயிடை
வல்வினைக் கயவரே வழங்குங் கங்குலே.

     (இ - ள்.) நல்வினை கழிதலும் - இன்புறுத்தும் நல்வினைப் பயன்
நுகர்ந்தொழிந்தவுடனே, நலியும் தீவினை செல்வதே போல் - துன்புறுத்தும் தீய
வினைப்பயன்கள் நுகர்ச்சிக்குச் சென்று தலைப்படுமாறு போலே, இருள்செறிந்து சூழ்ந்தது -
பகற்பொழுது கழிந்தவுடனே இருள் நெருங்கிப் பரவிற்று, ஆயிடை - அப்பொழுது, படர்ந்த
பல்வினை மடிந்தன - பரவிய பல்வேறு தொழில்களும் நிறுத்தப்பட்டன, வல்வினைக்கயவரே
வழங்கும் கங்குலே - களவு முதலிய தீவினை செய்யும் கயமாக்கள் மட்டுமே
வழங்குதற்குரிய அவ்விரவின்கண், (எ - று.)

அவ் விரவின்கண் இருள் சூழ்ந்தது என்க. நல்வினையும் தீவினையும் மாறி மாறி வருதலின்
அவற்றைப் பகலிரவுகட் குவமையாக்கினார். கொலை களவு முதலிய தீவினை செய்யும்
மாக்களே இரவிடைத் திரிவராதலின் “வல்வினைக் கயவரே வழங்கும் கங்குல்“ என்றார்
என்க.

( 231 )