அரசன் கனாக்கண்டதை நிமித்திகன் கூறுதல்

106. கயந்தலைக் களிற்றி னாயோர் கனாக்கண்ட துளது கங்குல்
நயந்தது தெரியி னம்பி நளிகடல் வண்ணன் றன்னை
விசும்பகத் திழிந்து வந்தோர் 1வேழம்வெண் போது சேர்ந்த
தயங்கொளி மாலை சூட்டித் தன்னிட மடைந்த தன்றே.
 

     (இ - ள்.) கய தலைக் களிற்றினாய் - மெல்லிய தலையையுடைய யானையை
உடையவனே! கங்குல் - இரவிலே; ஓர்கனாக் கண்டது உளது - நீ ஒரு கனாவினைக்
கண்டுள்ளாய்; நயந்து அது தெரியின் - விருப்பத்துடன் அக்கனாவினை ஆராய்ந்து
பார்த்தால்; ஓர்வேழம் - ஒரு யானை; விசும்பு அகத்து இழிந்து வந்து -
விண்ணிடத்தினின்றும் இறங்கிவந்து; நம்பி நளிகடல் வண்ணன் தன்னை - ஆண்மக்களிற்
சிறந்தவனும் பெரிய கடல்போன்ற கருநிறத்தை யுடையவனுமான திவிட்டனுக்கு;
வெண்போது சேர்ந்த தயங்கு ஒளிமாலை - வெள்ளிய பூக்களால் அமைந்த விளங்குகின்ற
ஒளியினை யுடைய மாலையை; சூட்டி - அணிந்து; தன் இடம் அடைந்தது - தனது
இடத்திற்குச் சென்றது. (எ - று.) அன்றே - அசை.

     கய, நளி என்பன பெருமையை உணர்த்தும் உரிச்சொற்கள். “தடவுங் கயவும் நளியும்
பெருமை“ என்பது தொல்காப்பியம். இச் செய்யுளால் அரசன் கண்ட கனா இன்னதென்று
குறிகாரன் எடுத்துக் கூறினான்.

( 37 )