(இ - ள்.) நள் இருள் இடையது நடப்ப - செறிந்த இருளையுடைய இடையாமம் இவ்வாறு கழிந்ததாக, புள்ளிமிழ் இசையொடு - பறவைகள் உறக்கம் நீத்தெழுந்து பாடுகின்ற இசையோடே, வைகறை புகுந்து போம்வழி - வைகறையாமம் தோன்றி நிகழ்கின்றபோது, கனையிருள் - செறிவுடைய இருள், தெள்ளிய மதியவன் - தெளிந்த அறிவுடையொருவனால், செய்த தீமைபோல - செய்யப்பட்ட தீமையைப் போன்று, மெல்லவே மெலிவு சென்றது - பைப்பய மெலிந்து போயிற்று, (எ - று.) தெள்ளிய மதியவன் ஒரோவழி ஊழினாலே தீமை செய்தானாயின் அதற்குப் பெரிதும் நாணி அத்தகைய தீமை மீண்டும் நிகழாது தற்காப்ப அத்தீமை குறைந்து வருதல்போலே இருள் குறைந்தது என்க. |