ஞாயிறு தோன்றுதல்

1066.

ஆணைசெய் தரசுவீற் றிருப்ப வாயிடைக்
கோணைசெய் குறும்புகூர் மடங்கு மாறுபோற்
சேணுயர் திகிரியான் கதிர்சென் றூன்றலும்
பாணியாற் 1கரந்தமுன் பரந்த சோதியே.
 

     (இ - ள்.) அரசு ஆணைசெய்து வீற்றிருப்ப - ஆற்றலுடைய அரசன் ஒருவன்
செங்கோன்மையுடையவனாய் ஆணைச்சக்கரம் உருட்டி அரியணையில் வீற்றிருப்பானாக,
ஆயிடை - அப்பொழுது, கோணை செய் குறும்பு - தீமையே செய்யும் இயல்புடைக் கொல்
குறும்புகள், கூர் மடங்கும் ஆறுபோல் - தம்மிகைச்செயல் ஒழிவதை ஒப்ப, சேண் உயர்
திகிரியான் - விசும்பின்கண் உயர்த்திய ஒற்றை உருளையையுடைய ஞாயிற்றுக் கடவுளின்,
கதிர் சென்று ஊன்றலும் - சுடர் பரந்து நிலவியவுடன், முன் பரந்த சோதி - முன்னர்ப்
பரந்து திகழ்ந்த உடுக்களின் ஒளி, பாணியால் கரந்த - அவ்வைகறைக் காலப்பகுதியோடே
மறைந்தொழிந்தன, (எ - று.)

கோண் + ஐ = கோணை - கோணுதலையுடைய செயல் எனவே தீவினை என்றபடி. பாணி -
காலம்.“உரைசெய் திகிரிதனை யுருட்டி ஒருகோலோச்சி உலகாண்ட
அரைச னொதுங்கத் தலையெடுத்த குறும்பு போன்ற தரக்காம்பல்“
என்று கம்பநாடர், இரவின் வருகையின் பொருட்டு இச்செய்யுட் கருத்தை மாற்றி யமைத்துக்
கொண்டமை காண்க.

( 240 )