1068.

தூண்டிய சுடர்விளக் கன்ன கன்னியோ
டாண்டகை யழல்வலஞ் செய்யு மாரணி
காண்டகை யுடைத்தது காண்டு நாமென
வீண்டிய கதிரவ னுதய மேறினான்.

     (இ - ள்.) தூண்டிய சுடர்விளக்கு அன்ன கன்னியோடு - தூண்டப்பட்ட
ஒளிப்பிழம்பையுடைய விளக்கைப் போன்ற சுயம்பிரபையுடனே, ஆண்டகை - திவிட்டநம்பி,
அழல் வலம் செய்யும் ஆர் அணி - திருமணவினையில் தீயை வலம்வரும் பேரழகு, காண்
தகை உடைத்து - காணத்தகும் மாண்புடையதாகலின், அது நாம் காண்டும் என -
அக்காட்சியை யாமும் சென்று காண்போம் என்று கருதியவளைப்போன்று,
ஈண்டிய கதிரவன் - செறிந்த சுடரையுடைய ஞாயிறு, உதயம் ஏறினான் - உதயகிரியின் கண்
ஏறித் தோன்றுவானாயினான். ( எ - று.)
தீவலஞ் செய்தவனைக் காண விரும்பி ஞாயிறு குணதிசையில் வந்து தோன்றினான், என்க.

( 242 )