(இ - ள்.) காளை - திவிட்டநம்பி, மாளிகை நிரைத்த மணி மாடம் நகர்முன்னால் - மாளிகைகள் மிக்கு நிரைந்துள்ளதும் மணிகள் இழைத்த மேனிலைமாடங்களை யுடையதும் ஆகிய அரண்மனையின் முன்மண்டபத்தே, ஆளி யரசு ஏந்தும் மணி ஆசனமதன் மேல் - அரசரிமாவால் சுமக்கப்பட்ட மணிகள் பதித்த அணையின்மேலே, கழல் வேந்தர் பலர் சூழ்தர - வீரக்கழலணிந்த அரசர்பலர் தன்னைச் சூழும்படி, இருந்தான் - இருந்தவன், நாளொடு பொலிந்த நகை மா மதியம் ஒத்தான் - விண்மீன்கள் தன்னைச் சூழாநிற்ப அவற்றிடையே அழகுற்றுத் திகழ்கின்ற முழுவெண்டிங்களை ஒத்திருந்தான், (எ - று.) திவிட்டநம்பி மண்டபத்தே வேந்தர் பலர் சூழ அரியணை மேலிருந்தவன், வானத்தே உடுத்திரளோடே பொலிவுற்ற திங்கள் மண்டிலத்தை ஒத்தான் என்க.. |