நிமித்திகன் கூறியதை அவையோர் உடன்பட்டுக் கூறுதல்

109.

1என்றவ னியம்பக் கேட்டே யிருந்தவர் வியந்து நோக்கிச்
சென்றுயர் 2திலகக் கண்ணித் திவிட்டனித் திறத்த னேயாம்
ஒன்றிய வுலக மெல்லா மொருகுடை நீழற் காக்கும்
பொன்றிக ழலங்கன் மார்ப போற்றிபொய் யன்றி தென்றார்.
 

     (இ - ள்.) என்று அவன் இயம்பக் கேட்டு - மேற்கூறியவாறு அந்த நிமித்திகன்
சொல்லக் கேட்டு; இருந்தவர் வியந்து நோக்கி - அவையிலுள்ளோர் வியப்படைந்து
அரசனைப் பார்த்து; ஒன்றிய உலகம் எல்லாம் - பொருந்திய வுலகங்கள் எல்லாவற்றையும்;
ஒரு குடை நீழல் காக்கும் - ஒற்றைவெண் கொற்றக்குடையின் நிழலிலே பாதுகாக்கின்ற;
பொன்திகழ் அலங்கல் மார்ப - பொன்னாலாகி விளங்குகின்ற மாலைகளை யணிந்த
மார்பையுடையவனே!; சென்று உயர்திலகம் கண்ணி திவிட்டன் - மேலே சென்று சிறந்த
திலகம்போல் உயர்ந்த மாலையை அணிந்த திவிட்டன்; இத்திறத்தனே ஆம் - இவ்வாறு
சிறப்புப் பெறுதற்கு உரியவனேயாவன்; இது பொய் அன்று - நிமித்திகன் கூறியது மெய்யே;
போற்றி என்றார் - நிமித்திகன் மொழிகளை மதிப்பாயாக என்றார்கள். (எ-று.)

     இருந்தவர் - வேள்வியாசிரியர் அமைச்சர் முதலியோர். இவர்கள் குறிகாரன்
உரையை மதித்துப்பேசியது திவிட்டனுடைய நடையுடை பாவனை முதலியவைகளை நன்கு
உணர்த்திருந்தமையினாலே என்க. திறத்தனே - ஏ - தேற்றப்பொருளது. போற்றுதல் -
குறிக்கொள்ளுதல்.
 

( 40 )